வாஷிங்டன் (பிப்ரவரி 24, 2026): மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' மற்றும் 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு' ஆகிய இரண்டு போர் கப்பல்கள் முகாமிட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ நகர்வு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சீனா தயாரித்த 'CM-302' ரக சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் சீனாவுடன் ஈரான் இறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 290 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், அமெரிக்கக் கடற்படையின் பாதுகாப்பு வளையங்களைத் தகர்க்கும் வல்லமை கொண்டவை எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது வான்வழி மற்றும் கடல்வழிப் படைகளை அதிகளவில் குவித்து வருகிறது. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் இணைந்து கூட்டு கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்த ஏவுகணை ஒப்பந்தம் வல்லரசுகளுக்கு இடையிலான 'நிழல் போரை' (Shadow War) மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய ஏவுகணைகள் ஈரானின் கைகளுக்குச் சென்றால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
Tags:
world news
