யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் நேற்று (ஜூலை 8) முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே மூன்று மனித எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இன்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று(ஜூலை 9) குறித்த மூன்று எலும்புக்கூடுகளும் மீட்டெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முதலாம் இலக்கமிடப்பட்டுள்ள அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் மனித உடைகள், சப்பாத்து என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இன்னும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை,” என்றார்.