தென்னிந்திய திரையுலகின் பிரபல இயக்குநரும், நடிகரும், இசையமைப்பாளருமான டி.ராஜேந்தர், செம்மணி சித்துப்பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்து தமிழர்களாகிய நமது நெஞ்சம் பதைபதைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பணிகளின்போது இதுவரை 44 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், 47 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இதைப் பார்க்கும்போது தமிழர்களாகிய எமது நெஞ்சம் பதைபதைக்கிறது. மயானத்தில் பிணங்கள் எரிக்கப்பட்டால் அதுதான் வெந்து கொண்டிருக்கும். ஆனால், எங்களுடைய தமிழினத்தின் அந்த எலும்புக்கூடுகளை இவர்கள் தோண்டி தோண்டி எடுக்கின்றபோது எங்களுடைய நெஞ்சம் வெந்து கொண்டிருக்கின்றது. அடிவயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.
பாத்தி கட்டி செடி வளர்ப்பார்கள். ஆனால், சித்துப்பாத்தியிலே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளை இவர்கள் புதைத்து, புதைகுழி வளர்த்திருக்கிறார்கள். புதைத்திருக்கிறார்கள், சிதைத்திருக்கிறார்கள், அழித்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
எங்கள் இனத்தின் மீது கொண்ட பகையின் காரணமாக இந்த அளவிற்கா? என்ன அநியாயம்! செம்மணியில் தோண்டி எடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூடுகள் யார்? எண்ணிப் பார்க்கிறேன். சேயைக் கட்டி அணைத்த வண்ணம் தாயைக் கண்டெடுத்திருக்கிறார்கள். புத்தகப் பையை ஏந்திப் பிடித்த சிறுவனைக் கொன்று குவித்திருக்கிறார்கள். உயிரோடு வைத்து புதைத்திருக்கிறார்களே… நெஞ்சம் பதைபதைக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது தமிழினம் கொதித்தெழ வேண்டும். அங்கு தமது சொந்தங்களை, பந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்துவிட்டு, இன்றுவரை அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? எரிந்தார்களா? புதைந்தார்களா? சிதைந்தார்களா? என்று தெரியாமல் நாதியற்று அலைந்துகொண்டிருக்கின்ற தமிழின உறவுகளின் உள்ளங்கள் எப்படிப் பாடுபட்டிருக்கும், எப்படிப் பதைபதைத்திருக்கும்!
இதைப் பார்க்கும்போது சர்வதேச அளவிலே எமது மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதிக்காக தமிழர்கள் ஒவ்வொருவரும், நாங்கள் தொப்புள் கொடி உறவுகளாகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.