புத்தளத்தில் நாளை போதைப்பொருள் எரிப்பு! அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் வைத்து எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் அதிரடியாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோ ஹெராயின் புத்தளம், பாலாவியவில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் எரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து 2021 டிசம்பரில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 250.996 கிலோ ஹெராயின் அடங்கும். இந்த நடவடிக்கையில் ஆறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட ஏழு வெளிநாட்டினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 243.052 கிலோ ஹெராயினும் இதில் அடங்கும்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நாளை காலை 7.00 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து இந்த ஹெராயின் விடுவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் புத்தளத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் முன்னிலையில் இந்த போதைப்பொருள் அழிக்கப்படவுள்ளது. இந்த பாரிய போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.