ஆப்கானிஸ்தானுடனான வடமேற்கு எல்லையை கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற 54 பயங்கரவாதிகளை தங்கள் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது. ராணுவ அறிக்கையின்படி, “பெரிய குழு ஒன்று பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையை ஊடுருவ முயன்றதை பாதுகாப்புப் படைகள் கண்டறிந்தது.” இந்த சம்பவம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையில் நடந்துள்ளது.
“இந்த ஜிஹாதி குழு பாகிஸ்தானுக்குள் உயர் மட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களின் ‘வெளிநாட்டு எஜமானர்களின்’ கட்டளையின் பேரில் ஊடுருவியது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 54 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தும் இந்த நேரத்தில், ஜிஹாதிக்களின் இத்தகைய நடவடிக்கைகள் அவர்கள் யாருடைய கட்டளைகளின்படி செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது” என்றும் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் தற்போது அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. இது தலிபான்கள் 2021 இல் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகரித்துள்ளது. இஸ்லாமாபாத் குற்றம் சாட்டுவது போல், தாக்குதல்தாரிகள் தற்போது ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதற்கிடையில், ஏப்ரல் 22 அன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 26 பேரைக் கொன்ற சம்பவத்திற்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு” ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இஸ்லாமாபாத் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கைபர் பக்துன்க்வாவிற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளிடமிருந்து “பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன” என்று பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள், அதே மாகாணத்தில் மூன்று மோதல்களில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். ஏஎப்பி புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடும் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும்பாலும் பாதுகாப்புப் படையினர் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஞாயிற்றுக்கிழமை லாகூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகளின் “வெளிநாட்டு எஜமானர்கள் அவர்களை பாகிஸ்தானுக்குள் நுழையத் தூண்டுகிறார்கள்” என்றார். “எங்கள் வீரர்கள் மூன்று பக்கங்களிலிருந்தும் அவர்களைத் தாக்கி 54 பயங்கரவாதிகளை கொன்றனர்,” என்று நக்வி கூறினார். “இன்றைய நிலவரப்படி இந்த தொடர் நடவடிக்கையில் இதுவே மிகப்பெரிய எண்ணிக்கை. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில்லை.” இஸ்லாமாபாத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையத்தின்படி, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் மிகவும் கொடிய ஆண்டாக இருந்தது. பெரும்பாலான தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானுடனான மேற்கு எல்லையில் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கத் தவறியதாக தலிபான் அரசாங்கத்தை பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. காபூல் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.