போர் நடக்கும் களத்தில் இருந்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்த இரு உக்ரைனியப் பத்திரிகையாளர்களை, ரஷ்யாவின் “லான்செட்” (Lancet) ட்ரோன் தாக்குதல் குறிவைத்து நடத்தியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!
இந்தச் சம்பவம் உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு உச்சக்கட்டக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
- உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமாட்டோர்ஸ்கில் (Kramatorsk) உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே, ‘ஃப்ரீடம்’ (Freedom) தொலைக்காட்சி நிருபர் ஒலேனா ஹுபனோவா மற்றும் ஒளிப்பதிவாளர் யெவ்ஹென் கர்மாசின் ஆகியோர், தங்களுடைய ‘PRESS’ என்று அச்சிடப்பட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்த நிலையிலும், ரஷ்ய ட்ரோன் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.
- இது ஒரு திட்டமிட்ட போர்க்குற்றம் என்றும், தன்னார்வக் குரல்களை அடக்குவதற்கான ரஷ்யாவின் தொடர்ச்சியான உத்தி என்றும் உக்ரைன் மனித உரிமைகள் கண்காணிப்பாளர் திமிட்ரோ லூபினெட்ஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் ஆவேசம்:
“இது ஒரு விபத்தோ அல்லது தவறோ அல்ல! உக்ரைனில் ரஷ்யாவின் போர்க்குற்றங்களைப் பற்றிப் பேசும் அனைத்துச் சுதந்திரமான குரல்களையும் அமைதியாக்க, ரஷ்யா திட்டமிட்டு நடத்தும் உத்தியே இது!” என்று அதிபர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 135 ஊடகப் பணியாளர்களை ரஷ்யா கொன்றுள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உண்மைக்குப் போராடிய குரல்களை மௌனமாக்கும் இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராக, உலக நாடுகள் அனைத்தும் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உக்ரைன் மற்றும் உலகப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.
![]()