ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத் தலத்திற்கு மிக அருகில் உள்ள முர்சியா (Murcia) மாகாணத்தின் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, பிரம்மாண்டமான நெருப்புப் பிழம்பாக உருவெடுத்து நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளை நோக்கி வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 65 அடி (20 மீட்டர்) உயரத்திற்கு எழும்பி வரும் இந்த ராட்சத நெருப்புச் சுவரைக் கண்டு, அந்தப் பகுதியில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த நூற்றுக்கணக்கான சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் தங்களின் வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளை விட்டு அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
முர்சியா மாகாணத்தின் ‘எல் வாலே-கராஸ்கோ’ (El Valle-Carrasco) பிராந்திய பூங்காவில் உள்ள புகழ்பெற்ற ‘கிரெஸ்டா டெல் காலோ’ (Cresta Del Gallo) மலைப்பகுதியில் மலையேற்றம் (Hiking) சென்றவர்கள், அங்குப் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதை முதலில் கவனித்து அவசரக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் வேகம் காரணமாக, இந்த காட்டுத்தீ அடுத்த சில மணி நேரங்களிலேயே ‘லோஸ் கார்ரெஸ்’ (Los Garres) மற்றும் ‘லேஜஸ்’ ஆகிய குடியிருப்பு மற்றும் சுற்றுலாப் பகுதிகளைச் சூழ்ந்தது. இந்தத் திடீர் விபத்து காரணமாக 200-க்கும் மேற்பட்ட அவசரக் கால அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்குப் பறந்ததால் அந்தப் பகுதியே பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) உத்தரவின் பேரில், அந்நாட்டின் சிறப்பு ராணுவப் பிரிவான ‘ராணுவ அவசரக்காலப் படை’ (UME) உடனடியாகக் களமிறக்கப்பட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 170-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் 11-க்கும் மேற்பட்ட அதிநவீன தீயணைப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாகவும், நிலவழியாகவும் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 177 ஹெக்டேர் (430 ஏக்கருக்கும் அதிகமான) பரப்பளவிலான அடர்ந்த வனப்பகுதி இந்தத் தீயில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக அதிகாரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கும் பகுதியான லோஸ் கார்ரெஸ் நகரின் எல்லை வரை 65 அடி உயர நெருப்புச் சுவர் பரவி வந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளூர் விளையாட்டு அரங்குகளிலும், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர விபத்தில் சிக்கி ஒருவருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பெய்த பலத்த மழையால் காடுகளில் வளர்ந்திருந்த அடர்ந்த புற்கள், தற்போதைய கோடை வெப்பத்தால் காய்ந்து போயிருந்ததே இந்தத் தீ விபத்து இவ்வளவு வேகமாகப் பரவக் காரணம் என்றும், இந்த தீ விபத்தின் பின்னணியில் யாராவது சமூக விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.