ஓமன் நாட்டு கடற்கரைக்கு அருகே ‘எம்.டி செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற வணிக எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஆரம்பத்தில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட 3 இந்திய மாலுமிகளும் உயிருடன் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் துயரச் செய்தியை மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பலாவு நாட்டின் கொடியுடன் 24 இந்திய மாலுமிகள் உட்பட 28 பணியாளர்களுடன் சென்ற இந்தக் கப்பல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெயைக் கடத்திச் சென்று சர்வதேச தடைகளை மீறியதாகக் கூறி அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் (CENTCOM) கப்பலின் எஞ்சின் அறையை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கப்பல் முற்றிலும் செயலிழந்ததுடன் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமன் நாட்டின் கடற்படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் கப்பலில் இருந்த 21 இந்திய மாலுமிகளைப் பத்திரமாக மீட்ட போதிலும், 3 பேர் நடுக்கடலில் மாயமாகினர்.
தற்போது தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மாயமான 3 இந்திய மாலுமிகளின் உடல்களும் கண்டறியப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாலுமிகள் டெக் கேடட் ஆதித்யா சர்மா (ஹிமாச்சல பிரதேசம்), எஞ்சின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா (உத்தர பிரதேசம்) மற்றும் தலைமை பொறியாளர் பட்நாலா சுரேஷ் (ஆந்திர பிரதேசம்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்த இந்திய கடல்சார் குடும்பத்திற்கும் நேரிட்ட மாபெரும் இழப்பு என்று அமைச்சர் சர்பானந்த சோனாவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வணிகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) ஏற்கனவே தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து இந்தியா தனது பலத்த எதிர்ப்பை (Demarche) வெளிப்படுத்தியுள்ளது . ஆயுதங்கள் ஏதும் இல்லாத, அப்பாவி மாலுமிகள் பணிபுரியும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மாலுமிகளின் பாதுகாப்பை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா மிக வலுவாக வலியுறுத்தியுள்ளது.