மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா மோதலால் சர்வதேச எரிசக்தி விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க பிரான்ஸ் தனது கடற்படையை அதிரடியாகக் களமிறக்கியுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தனது நாட்டின் விமானந்தாங்கி கப்பலான ‘சார்லஸ் டி கோல்’ (Charles de Gaulle) மற்றும் சுமார் ஒரு டஜன் போர்க்கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்பப்போவதாக அறிவித்துள்ளார். எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தைச் சீர்செய்யவும், வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் இந்த ‘தற்காப்பு’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மெத்தனமாகச் செயல்படுவதாக அந்நாட்டு அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கடற்படையை விரைந்து அனுப்பியிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon) போர்க்கப்பல் இன்னும் போர்ட்ஸ்மவுத் தளத்திலேயே முடங்கிக் கிடப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் ஸ்டார்மரின் தயக்கத்தையும், இராணுவத் தயார்நிலையில் ஏற்பட்டுள்ள தாமதத்தையும் கடுமையாகச் சாடியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானியாவின் இத்தகைய மெதுவான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டி ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். “இராணுவ உதவி தேவைப்பட்ட நேரத்தில் பிரித்தானியா செயல்படவில்லை” என்று அவர் விமர்சித்திருந்தது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கப்பல்கள் அனுப்பப்படுவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம், பிராந்தியத்தில் பிரித்தானியாவின் செல்வாக்கையும் இராணுவத் திறனையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரித்தானிய அரசாங்கம், தனது குடிமக்களைப் பாதுகாப்பதும், இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதும் தான் தற்போதைய முன்னுரிமை என்று விளக்கமளித்துள்ளது. எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் வணிக நலன்களைக் காக்கப் போட்டி போட்டுக் கொண்டு கடற்படையைப் பலப்படுத்தி வரும் வேளையில், பிரித்தானியா பின் தங்கியிருப்பது அந்நாட்டு உள்நாட்டு அரசியலில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. மார்ச் 10-ம் தேதி நிலவரப்படி, களத்தில் பதற்றமான சூழலே நீடிக்கிறது.
