பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா ஆகியோர் இந்த ஏப்ரல் மாத இறுதியில் (ஏப்ரல் 27-30) அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களை ராணி கமீலா ரகசியமாகச் சந்திக்கக்கூடும் என்ற யூகங்கள் பரவி வருகின்றன. எப்ஸ்டீன் விவகாரத்தில் இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டுகளால் அரச குடும்பத்தின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக கமீலா இந்தச் சந்திப்பை நடத்தலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் சட்ட ரீதியான விசாரணைகள் காரணமாக இத்தகைய அதிகாரப்பூர்வச் சந்திப்புகள் நடைபெற வாய்ப்பில்லை என அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ஒரு முக்கியமான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், எப்ஸ்டீன் விவகாரத்தில் தன்னைத் தொடர்புபடுத்தி வெளியாகும் அனைத்துத் தகவல்களும் “முற்றிலும் பொய்யானவை மற்றும் அவதூறானவை” என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எவ்விதத் தொடர்பும் இருந்ததில்லை என்றும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
மெலனியா டிரம்பின் இந்த அதிரடி செய்தியாளர் சந்திப்பானது, வரும் வாரம் பிரிட்டன் ராணி கமீலாவைச் சந்திப்பதற்கு முன்னதாகத் தனது நற்பெயரைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ராணி கமீலாவின் வருகையின் போது, அவரோடு சரிசமமான கௌரவத்துடன் காட்சியளிக்கவும், எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் தனது பிம்பத்தைப் பாதிக்காமல் இருக்கவும் மெலனியா இப்போதே “களத்தை தயார்” செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, மெலனியா சமீபகாலமாகப் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதிலும், ஏஐ (AI) தொழில்நுட்பம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் முன்னிலை வகிப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.
மன்னர் சார்லஸின் இந்தப் பயணம், அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையவுள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதி மன்னர் சார்லஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அதே சமயம், ஈரான் போர்ச் சூழலுக்கு மத்தியில் இந்தப் பயணம் நடைபெறுவது பல்வேறு இராஜதந்திரச் சவால்களை உருவாக்கியுள்ளது. எப்ஸ்டீன் விவகாரம், ஈரான் போர் மற்றும் மெலனியா டிரம்பின் புதிய முயற்சிகள் எனப் பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்தப் பயணம் அமெரிக்க-பிரிட்டன் இடையிலான “சிறப்பு உறவை” (Special Relationship) மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.