Posted in

டெல்லி பறக்கும் கனிமொழி! காங்கிரசுக்கு 40 சீட்? ‘பவர் ஷேரிங்’ கேட்டு மிரட்டும் ராகுல் – விழிபிதுங்கும் அறிவாலயம்!

டெல்லி பறக்கும் கனிமொழி! காங்கிரசுக்கு 40 சீட்? ‘பவர் ஷேரிங்’ கேட்டு மிரட்டும் ராகுல் – விழிபிதுங்கும் அறிவாலயம்! - Image 1

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. “ஆட்சியில் பங்கு” மற்றும் “40 தொகுதிகள்” என்ற காங்கிரஸ் கட்சியின் அதிரடி கோரிக்கையால் கூட்டணியில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முட்டுக்கட்டையை உடைத்து, இறுதிக்கட்ட முடிவை எடுப்பதற்காக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், அக்கட்சியின் முக்கியத் தூதுவருமான கனிமொழி கருணாநிதி இன்று டெல்லி விரைந்துள்ளார். அங்கு அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த திமுகவின் இறுதி நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ளார்.

தமிழக காங்கிரசுக்குள் தற்போது இருவேறு துருவங்கள் மோதி வருகின்றன. “திமுக கொடுப்பதை வாங்கிக் கொண்டு கூட்டணியில் நீடிப்பதே புத்திசாலித்தனம்” என்று ஒரு தரப்பினரும், “நமது கௌரவமான கோரிக்கைகளை ஏற்காவிட்டால், திமுக கூட்டணியே நமக்குத் தேவையில்லை; தனித்துப் போட்டியிடலாம் அல்லது மற்ற மாற்றுகளை யோசிக்கலாம்” என்று மற்றொரு தரப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக, கடந்த முறை 25 இடங்களை மட்டுமே வழங்கிய திமுக, இந்த முறை காங்கிரஸ் கேட்கும் 40 இடங்களைக் கொடுக்க முன்வருமா? அல்லது 32 முதல் 35 இடங்களுக்குள் சமரசம் செய்யுமா? என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கள் மேலும் எண்ணெய் ஊற்றியுள்ளன. “யாருமே எங்களுடன் கூட்டணிக்கு வராவிட்டாலும், நாங்கள் தனித்தே நின்று ஜெயிப்போம்” என்று விஜய் மாமல்லபுரத்தில் ஆவேசமாகப் பேசியது, காங்கிரசுக்கு அவர் விடுத்த மறைமுக அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், திமுகவை மிரட்டிப் பணிய வைக்க காங்கிரஸ் இந்த ‘விஜய் ஃபேக்டரை’ ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது. கனிமொழி – ராகுல் இடையிலான இந்தச் சந்திப்பு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *