பகீர் சம்பவம்: “வீட்டில் ₹1 கூட இல்லை, காசு வைக்கவும்!” – 4 பக்கக் கடிதம் எழுதிவிட்டுச் சென்ற வினோதத் திருடன்!
திருடச் சென்ற வீட்டில் பணம் ஏதும் இல்லாததால், ஆத்திரமடைந்த ஒரு நபர், வீட்டு உரிமையாளருக்கு நான்கு பக்கங்களைக் கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தது எப்படி?
நெல்லை பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பால் என்பவர், தன் மகளைப் பார்ப்பதற்காகக் குடும்பத்துடன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், வீட்டிலிருந்த பீரோவை உடைத்து, நகை மற்றும் பணம் இருக்கிறதா என்று தீவிரமாகத் தேடியுள்ளார். முடிவில், வீட்டில் இருந்த சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உண்டியலை மட்டுமே அவர் திருடிக்கொண்டு சென்றுள்ளார்.
திருடன் எழுதிய கடிதம்
வீட்டில் எதுவும் கிடைக்காத ஆத்திரத்தில், திருட வந்த நபர் வீட்டு உரிமையாளருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் நான்கு பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
கடிதத்தின் சாரம்:
“வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை, அடுத்த தடவை என்ன மாதிரி திருட வந்தால் யாரும் ஏமாற வேண்டாம். காசு வைக்கவும்.”
“எதற்கு இத்தனை கேமரா? போங்கடா வெண்ணைகளா. என்னை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு திருடன்.”
மேலும், திருட வந்த நபர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வினோதச் சம்பவம் குறித்துப் பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடிதம் எழுதிய மர்ம நபரைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.