இங்கிலாந்து வெப்ப அலை அதிகமாக இருப்பதால் சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
இங்கிலாந்து நாட்டில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், நாட்டின் தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை பரவலாக உயர்ந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் (Met Office) கணித்தபடி, ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கில் 31°C ஆகவும், திங்களன்று இங்கிலாந்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 34°C வரையும் வெப்பநிலை உயரக்கூடும் என்றும் அடுத்த 2 நாட்களில் தென்கிழக்கின் சில பகுதிகளில் 35°C வரைகூட வெப்பநிலை உயரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இங்கிலாந்தின் லண்டன், ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ், தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட பல பகுதிகளுக்கு ஆம்பர் வெப்ப சுகாதார எச்சரிக்கை (Amber Heat Health Alert) விடப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) வெளியிட்ட இந்த எச்சரிக்கையில், உடல்நலம் மற்றும் சமூக நல சேவைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு நேர வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் இரவில் 20°C-க்குக் குறையாமல் இருப்பதால், இது “வெப்ப மண்டல இரவுகள்” (Tropical Nights) என்று அழைக்கப்படுகிறது. ஓரிரு வாரங்களில் மேற்கிலிருந்து புதிய காற்று வீசத் தொடங்கி வெப்ப அலையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஜூலை மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் வடமேற்குப் பகுதிகள், வட அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்து உட்பட சில பகுதிகள் மேகமூட்டத்துடனும், கனமழையுடனும் காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.