லண்டனில் மெட்ரோ ரயில் பயணத்தின் போது டெவில் ப்ரீத் (‘Devil’s Breath) என்று கூறப்படும் நினைவை அழிக்கும் மயக்க மருந்து மூலம் தன்னை ஒரு பெண் பயணி தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
எலிசபெத் லைன் சுரங்க ரயிலில் டெபோரா ஆஸ்கர் என்ற பெண் பயணித்துள்ளார். ஆஸ்கர் சென்ற ரயில் பெட்டி காலியாக இருந்த போது ஒரு பெண் பயணி செய்தித்தாளை அசைத்துக்கொண்டே தன்னை நோக்கி வந்ததாக தெரிவித்தார். அந்தப் பெண் தன்னருகே வந்து அமர்ந்ததும், சில நிமிடங்களிலேயே தனக்கு போதை ஏற்பட்டு மயங்கியதை போல் உணர்ந்ததாக ஆஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் அந்த பெண் தன்னிடம் வந்து வழி கேட்க போவதாக நினைத்த ஆஸ்கருக்கு, மயக்கம் வரும்போதுதான் ஏமாற்றப்படுவது தெரிய வந்தது. அந்த பெண்ணுடன் இரு சந்தேகத்திற்குரிய ஆண்கள் இருந்ததால் அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்ற அச்சத்தில் ஆஸ்கர் இருந்துள்ளார்.
பார்ப்பதற்கு நன்றாக உடையணிந்திருந்த அந்த பெண் சுற்றுலாப் பயணி தன்னை காட்டி கொண்டதால் அவர் மீது ஆரம்பத்தில் சந்தேகம் வரவில்லை என்றும், அந்த பெண் தனக்கு அருகில் அமர்ந்ததும் ஏற்பட்ட மயக்கமே அவரின் மீதான சந்தேகத்தை வரவைத்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆஸ்கர் கூறியுள்ளார்.
தான் அரை மயக்கத்தில் இருக்கும் போதே எங்கோ ஒருமுறை வீடியோவில் பார்த்த டெவில்ஸ் ப்ரீத் மருந்து பற்றி ஞாபத்துக்கு வந்ததாகவும், அது போல் தனக்கு மயக்க மருந்து கொடுத்திருப்பதையும் உணர்ந்ததாக கூறிய ஆஸ்கர், உடனே தன்னை பாதுகாப்பதற்காக அரைமயக்கத்துடன் வேறு பெட்டிக்கு மாறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ள ஆஸ்கர், லண்டன் மக்களுக்கு பாதுகாப்பான நகரமாக இருந்தாலும், இதுப்போல் புதிய மோசடி அரங்கேறி வருவதால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி எச்சரித்துள்ளார்.
‘டெவில்ஸ் பிரீத்’ என்பது ஹையோசைன் (hyoscine) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த சுவாசம் மூலம் செலுத்தப்படும் மயக்க மருந்து. இது ஸ்கோபொலாமைன் (scopolamine) என்பதன் அறிவியல் பெயர். இது பொதுவாக பொழுதுபோக்கு மருந்தாகக் கருதப்படுவதில்லை, மாறாக குறிப்பிட்ட மருத்துவ பயன்பாடுகளைக் கொண்ட ஒரு மருந்தாகும். இருப்பினும், எளிதில் மயக்க மடைய செய்யும் வீரியத்தால் டெவில் ப்ரீத் என்ற மயக்க மருந்தை சிலர் தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.