உங்களுக்கு நினைவிருக்கும்…. பேரழிவு ஆயுதங்கள் என்னிடம் உள்ளன, அமெரிக்காவைத் துவம்சம் செய்வேன் என்று கூறிவந்தார் முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன். ஆனால், திடீரென்று அமெரிக்கா ஈராக்கைக் கைப்பற்றியபோது, அங்கே ஒரு சிறிய ராக்கெட்கூட இல்லை. அதுபோலவே, ரஷ்யாவும் தனது பலத்தை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டனவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
காரணம், ரஷ்யா போர் விமானங்களைத் தயாரிப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்திவிட்டது. தற்போதுள்ள விமானங்களையே மேம்படுத்திப் பயன்படுத்தி வருகிறது. புதிய போர்க்கப்பல்களையோ அல்லது நீர்மூழ்கிக் கப்பல்களையோ கட்டவில்லை. இதைவிட முக்கியமான விடயம் அணுகுண்டுகள். ரஷ்யாவிடம் உள்ள அணுகுண்டுகளின் கதையைக் கேட்டால் பெரும் சந்தேகம் எழும். அவை 1960களிலும் 1970களிலுமே தயாரிக்கப்பட்டவை.
அவற்றைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை மட்டுமே ரஷ்யா புதிதாக வடிவமைத்துள்ளது. அப்படியென்றால், 50 ஆண்டுகள் பழமையான இந்த அணுகுண்டுகளை ஏவினால் அவை வெடிக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள் ராணுவ ஆய்வாளர்கள். இவ்வாறிருக்க, சில தினங்களுக்கு முன்னர் உக்ரைன், ‘ஸ்பைடர் வெப்’ (Spider Web) என்று அழைக்கப்படும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா மீது மேற்கொண்டது. இது ரஷ்யாவின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் பங்கத்தை ஏற்படுத்திய விடயமாகும்.
இதற்குப் பதிலடியாக, ரஷ்யா தன்னிடம் உள்ள ‘சாத்தான் 2’ (Satan II) ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் மீது பெரும் தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷ்யா எதிர் தாக்குதல் என்ற பெயரில் சாதாரண ட்ரோன்களை அனுப்பியே உக்ரைன் நகரங்களைத் தாக்கி வருகிறது. உக்ரைனில் உள்ள எந்தவொரு ராணுவத் தளத்தையும் ரஷ்யாவால் துல்லியமாகத் தாக்க முடியவில்லை. அதேவேளை, ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைனுக்குள் நுழைய முடியாத அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்? இதன் பின்னணி என்ன என்பது போன்ற பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதேவேளை, ரஷ்யா 2028-ல் ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரிட்டன் மற்றும் போலந்தைத் தாக்கும் என்று ஒரு ரகசியப் புலனாய்வுத் தகவல் கசிந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பிரிட்டன் தனது பாதுகாப்பிற்காகப் பல பில்லியன் பவுண்டுகளைச் செலவு செய்யத் தொடங்கியுள்ளது. இதிலும் ஒரு விடயம் உள்ளது…
உண்மையில் இப்படி ஒரு புலனாய்வுத் தகவல் கிடைத்ததா? அல்லது பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் வெகுவாகக் குறைந்து வருவதால், ரஷ்யாவின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி மக்களைத் திசை திருப்புகிறார்களா என்பதும் தெரியவில்லை. எது எப்படி இருப்பினும், ரஷ்யாவின் இந்த மௌனம் பெரும் திகிலாகவே உள்ளது.