மத்தியப் பிரதேச தலைநகர் போபாலின் ஐஷ்பாக் மைதானத்திற்கு அருகில் புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட போபால் மேம்பாலம், அதிகாரப்பூர்வ திறப்பு விழாவிற்கு முன்பே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 648 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த மேம்பாலம், 18 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் 90 டிகிரி கோணத்தில் அமைந்துள்ள கூர்மையான திருப்பம் தான் இந்த சர்ச்சைக்குக் காரணமாகும். இது உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஊடக பயனர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாலம் எதிர்காலத்தில் விபத்துகளுக்கான இடமாக மாறக்கூடும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
இந்த மேம்பாலம், கிராசிங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், நீண்ட காத்திருப்புகளை நீக்குவதற்கும் நோக்கமாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது. மேலும், மஹாமாய் கா பாக், புஷ்பா நகர், நிலையப் பகுதி மற்றும் நியூ போபால் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. 2023 மார்ச்சில் தொடங்கிய பாலக் கட்டுமானம், பயண நேரங்களையும் போக்குவரத்து இடையூறுகளையும் குறைப்பதன் மூலம் தினமும் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் மக்களுக்குப் பயனளிக்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது. எனினும், அதன் விசித்திரமான வடிவமைப்பு பொதுமக்கள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் மத்தியில் விமர்சன அலைகளைத் தூண்டியுள்ளது.
பாலத்தின் ஒரு முனையில் உள்ள இறுக்கமான 90 டிகிரி திருப்பம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பொறியியல் தேர்வுக்குப் பின்னால் உள்ள தர்க்கத்தையும், அது பாதுகாப்பானது தானா என்பதையும் பலர் கேள்வி எழுப்புகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்தப் பாலம் குறித்த காட்சிகள் பரவி வரும் நிலையில், அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தப் பாலத்தின் வடிவமைப்பு விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.