அகமதாபாத்: நேற்று இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த இரண்டு மருத்துவர்களும் அவர்களது குழந்தைகளும், துயரச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட ஒரு உருக்கமான கடைசி செல்ஃபி படம், தற்போது வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
உதய்பூரில் மருத்துவராகப் பணியாற்றி வந்த டாக்டர் கோமி வ்யாஸ், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, லண்டனில் உள்ள தனது கணவர் டாக்டர் பிரதீக் ஜோஷியுடன் மூன்று குழந்தைகளுடன் சேர திட்டமிட்டிருந்தார். ‘புதிய தொடக்கங்களை’ கொண்டாடும் வகையில், விமானப் பயணத்தின் மகிழ்ச்சியில் குடும்பத்தினர் இந்த செல்ஃபி படத்தைப் எடுத்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த குடும்பம் விபத்தில் சிக்கி உயிரிழந்த 260 பேரில் ஒருவராக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் (பிரித்தானிய நேரம் காலை 8.10) ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், நகரத்தின் மக்கள் நெருக்கடி மிகுந்த மேகானி பகுதியில் பூமியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பயணிகளுடன், தரையில் இருந்த சிலரும் சேர்த்து குறைந்தது 260 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டாக்டர் ஜோஷியால் எடுக்கப்பட்ட அந்த செல்ஃபி படத்தில், அவரும் அவரது மனைவியும் ஒருபுறம் புன்னகையுடன் அமர்ந்திருக்க, அவர்களின் ஐந்து வயது இரட்டை மகன்களான நகுல் மற்றும் பிரத்யுத் மற்றும் எட்டு வயது மூத்த மகளான மிராயா ஆகியோர் எதிர் வரிசையில் பெரிய புன்னகையுடன் காட்சியளிக்கின்றனர்.
டாக்டர் ஜோஷியின் உறவினர் நயன் கூறுகையில், “அவர்கள் லண்டன் விமானத்தில் ஏற நேற்று அகமதாபாத் புறப்பட்டனர். பிரதீக் தனது மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல இரண்டு நாட்களுக்கு முன்புதான் இங்கு வந்திருந்தார்” என்று தெரிவித்தார்.