இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட வயது வந்தோர் தங்கள் உயிரை முடித்துக் கொள்ளும் உரிமையை வழங்கும் ஒரு மசோதாவிற்கு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பின் மூலம் ஒப்புதல் அளித்துள்ளனர். 314 வாக்குகளுக்கு 291 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதரிக்கப்பட்ட ‘குணப்படுத்த முடியாத நோயாளிகள் மசோதா’ (Terminally Ill Adults Bill), அடுத்தகட்ட ஆய்வுக்காக பிரபுக்கள் சபைக்கு (House of Lords) அனுப்பப்படவுள்ளது. உணர்ச்சிகரமான விவாதத்திற்குப் பிறகு இந்த மசோதா 23 வாக்குகள் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்பட்டது. நவம்பரில் முதல் முறையாக விவாதிக்கப்பட்டபோது கிடைத்த 55 வாக்குகள் பெரும்பான்மையிலிருந்து இது குறைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மரணமடைவதைக் கண்ட தனிப்பட்ட கதைகளை இந்த விவாதத்தின் போது வெளிப்படுத்தினர்.
இந்த மசோதாவை பிரபுக்கள் சபை இந்த ஆண்டு இறுதிக்குள் அங்கீகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தால், இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அமைச்சர்களுக்கு அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். அதாவது, கருணைக் கொலை (assisted dying) 2029 க்குப் பிறகுதான் இங்கிலாந்தில் சாத்தியமாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மசோதா மீது ‘சுதந்திரமான வாக்களிப்பு’ (free vote) அனுமதிக்கப்பட்டது. அதாவது, அவர்கள் கட்சி கொள்கையைப் பின்பற்ற வேண்டியதில்லை. பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை ஆதரித்தார். அதே நேரத்தில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பேடெனாக் மற்றும் சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் ஆகியோர் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிம் லீட்பீட்டர் இந்த மசோதாவை பொதுமக்கள் சபையில் வெற்றிகரமாக கொண்டு சென்றார். வாக்கெடுப்புக்குப் பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர், தான் “மகிழ்ச்சியில் திளைப்பதாக” கூறினார். “குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் இது என்ன அர்த்தம் என்பதை நான் அறிவேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தனது சகோதரி ஜோ காக்ஸ் கொல்லப்பட்டு ஒன்பது ஆண்டுகள் ஆனதால், இது “குறிப்பாக உணர்ச்சிகரமான வாரம்” என்றும் அவர் கூறினார். “நல்லவர்கள் முன்வராவிட்டால், அரசியலுக்கு வராவிட்டால், நாம் என்ன செய்வோம் என்று ஜோ சொல்லுவார். சில சமயங்களில் இந்த இடத்தில் நாம் சற்றுத் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாலும், நாம் ஒரு மாற்றத்தை உருவாக்கவும், சமூகம் நம்மிடம் கேட்ட நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தவும் இங்கு வந்துள்ளோம்” என்று கிம் லீட்பீட்டர் கூறினார்.