இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் கடந்த 16ஆம் திகதி நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நெதன்யாகு, “தனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது, இஸ்ரேல் – ஈரானுக்கு இடையே இடம்பெற்றுவரும் போருக்கு தான் கொடுத்த விலை” என்று உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, காசாவில் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது சரியா எனப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாகவே நெதன்யாகு தனது மகனின் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு நெதன்யாகு கருத்து வெளியிட்டார். அப்போது, “பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுகின்றனர், எனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. எனது மகனின் திருமணமும் ஒத்திவைக்கப்பட்டது. அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும்” என்று கூறினார். மேலும், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதால் தனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், “ஒரு வீராங்கனையைப் போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்” என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தனிப்பட்ட தியாகத்தை அவர் பொதுவெளியில் வெளிப்படுத்தியது, போரின் தாக்கம் அனைவரையும் பாதிக்கிறது என்பதைக் காட்ட முயற்சித்திருக்கலாம்.
எனினும், நெதன்யாகுவின் இந்த கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. போரின் யதார்த்தத்தையும், நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் இழப்புகளையும் பொருட்படுத்தாமல் நெதன்யாகு தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். போர்ச் சூழலில் ஒரு தேசத்தின் தலைவரின் தனிப்பட்ட தியாகம் முக்கியமா அல்லது ஒட்டுமொத்த மக்களின் துயரங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் முக்கியமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.