நைஜரின் இராணுவம் நேற்று (சனிக்கிழமை) மாலி எல்லையை ஒட்டியுள்ள நாட்டின் மேற்குப் பகுதியில் ஜிஹாதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு ஒன்று வெள்ளிக்கிழமை “பொதுமக்கள் முகாம்களுக்குள் மறைந்திருந்த பயங்கரவாத கூறுகளால் கோழைத்தனமாக தாக்கப்பட்டது” என்றும், அதன் 12 உறுப்பினர்கள் “உயிர் தியாகம் செய்தனர்” என்றும் இராணுவம் கூறியுள்ளது.
தாக்குதல்தாரிகள் நைஜரின் மேற்குப் பகுதியில் உள்ள பெரிய நகரமான தில்லாபேரிக்கு அருகிலுள்ள சாகோயிராவிற்கு வடக்கே சுமார் 10 கிமீ (ஆறு மைல்) தொலைவில் தாக்குதல் நடத்தினர். பின்னர் நைஜர் இராணுவத்தின் கூடுதல் படையினர் மாலி எல்லையை நோக்கி “எதிரியை வடக்கே தப்பியோடச் செய்தனர்” என்று இராணுவம் தெரிவித்துள்ளது. “பெரிய அளவிலான பின்தொடர்தல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது,” என்றும், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இராணுவம் மேலும் கூறியுள்ளது.
மாலி மற்றும் புர்கினா பாசோ எல்லைகளுக்கு அருகிலுள்ள தில்லாபேரியைச் சுற்றியுள்ள பரந்த பிரதேசம் பல ஆண்டுகளாக அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய ஜிஹாதி குழுக்களின் கொடிய தாக்குதல்களின் களமாக இருந்து வருகிறது. நைஜர் 2023 ஜூலை முதல் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஆட்சிக்குழுவால் ஆளப்படுகிறது. இந்த தாக்குதல் இப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு சீர்கேட்டை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.