இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: – ஒபாமா ஆவேசம்!

இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: – ஒபாமா ஆவேசம்!

அமெரிக்காவின் அரசியல் சூழலில் கடந்த சில நாட்களாக பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. டிரம்ப் ஆதரவாளரான வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க், உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துயர சம்பவம் அமெரிக்காவை உலுக்கியுள்ளது.

இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, முன்னாள் அதிபர் ஒபாமா மௌனம் கலைத்து, அமெரிக்கா ஒரு ‘கடுமையான திருப்புமுனையில்’ இருப்பதாக எச்சரித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “சார்லி கிர்க்கின் அரசியல் கருத்துக்களுடன் நான் முரண்பட்டாலும், அவரது மரணம் ஒரு துயரம். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவரின் நோக்கம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த துயரத்தை சிலர், அரசியல் விவாதங்களை நசுக்குவதற்கும், வெறுப்பை பரப்பவும் பயன்படுத்துகின்றனர்” என குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் அரசியல் வன்முறை என்பது புதியதல்ல என்றாலும், அது ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்று ஒபாமா சுட்டிக்காட்டினார். மேலும், “அதிபர் டிரம்ப், சார்லி கிர்க்கின் மரணத்தை ‘தீவிர இடதுசாரிகளின்’ செயல் என்று குற்றம் சாட்டுகிறார். இது, அரசியல் ரீதியான பிளவை மேலும் அதிகப்படுத்தும்” என்று ஒபாமா வேதனை தெரிவித்தார்.

“ஒரு தலைவரின் கடமை, நெருக்கடியான தருணங்களில் மக்களை இணைப்பது. ஆனால், இப்போது நடப்பது இதற்கு நேர்மாறாக உள்ளது” என டிரம்ப்பின் தலைமையின் கீழ் நிலவும் பிளவுகளை ஒபாமா விமர்சித்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஒபாமாவின் பேச்சுக்கும், டிரம்ப்பின் வெள்ளை மாளிகைக்கும் இடையே ஒரு புதிய மோதல் வெடித்துள்ளது. டிரம்ப் தரப்பில், “அரசியல் பிளவுகளை உருவாக்கியவரே ஒபாமா தான்” என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 22 வயதான டைலர் ராபின்சன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிர்க்கின் வெறுப்புப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலை நடத்தியதாக ராபின்சன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

ஒருபுறம், ஒரு இளைஞர், தனது அரசியல் கருத்துக்காக கொல்லப்பட்டிருப்பது அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், இந்த சம்பவம், அமெரிக்காவின் அரசியல் சூழல் எந்த அளவுக்கு விஷத்தன்மையுடன் மாறியுள்ளது என்பதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.