ஜெருசலேம் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் பாலஸ்தீனிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
ஜெருசலேமின் வடக்கு பகுதியில் உள்ள ராமோட் சந்திப்பில் நேற்று காலை இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இரண்டு பாலஸ்தீனியர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய இருவரையும் அங்கிருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியும் மற்றொரு நபரும் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 2024-க்குப் பிறகு நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று. காசா போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் மற்றும் மேற்கு கரைப் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.