எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான மோதல்களால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் பெரும் பதற்றத்தைக் குறைக்க, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன!
முன்னதாக, துருக்கி (Türkiye) மற்றும் கத்தார் (Qatar) ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் பயனற்று முடிவடைந்ததாக பாகிஸ்தான் நேற்று முன்தினம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த புதிய முயற்சி உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த ராணுவ மோதல்கள், டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமாகின. குறிப்பாக, பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தும் போராளிக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் அடைக்கலம் வழங்கப்படுவதாக இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை காபூல் (ஆப்கானிஸ்தான்) மறுக்கிறது.
துருக்கியில் நடந்த நான்கு நாள் பேச்சுவார்த்தைகள், ஆப்கானிஸ்தான் தரப்பு ‘தர்க்கரீதியான கோரிக்கைகளை’ ஏற்க மறுத்ததால் தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் தரப்பு குற்றம் சாட்டியது. இதனால், இருதரப்புக்கும் இடையே முழுப் போர் வெடிக்கும் அபாயம்கூட இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்திருந்தார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, பாகிஸ்தான் குழு கிளம்பத் தயாரான நிலையில், மத்தியஸ்தம் செய்யும் நாடான துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளன.
இதன் காரணமாக, இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாதிகளை ஒடுக்க, காபூல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தும்.
எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்த கடைசி நேர முயற்சி அமைதியை ஏற்படுத்துமா அல்லது இரு அண்டை நாடுகளும் மீண்டும் மோதலை நோக்கிச் செல்லுமா என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது!