தமிழ்நாட்டில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற அக்கட்சியின் பிரசாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சட்டப் போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அண்மையில் நடைபெற்ற தவெக இணைப்பு விழா ஒன்றில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு உள்ளது; அதை முடிக்காமல் விடமாட்டோம். காவல்துறையை வைத்து நெரிசலை உருவாக்கி விஜய் மீதே கை வைத்தீர்கள்; மக்களைக் கொன்று குவித்தீர்கள். அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்” என்று திமுகவை நேரடியாகக் குற்றம் சாட்டிப் பேசினார். இந்த அதிரடிப் பேச்சு ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே புதிய அரசியல் போரை மூட்டியுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஆக்ரோஷமான பேச்சுக்கு எதிராக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) மிக அவசரமாக ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிபிஐ (CBI) தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலுள்ள (Accused List) ஒரு அமைச்சரே பொதுவெளியில் இப்படிப் பேசுவது சட்டவிரோதமானது என்று திமுக தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உஷேபா அகமதி, விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் முன்னிலையில் இந்த விவகாரத்தை அவசரமாக முறையிட்டார். இந்த வழக்கில் முக்கியச் சாட்சிகளாக இருக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தவெக தலைவர்கள் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ள சூழலில், இத்தகைய பொது அறிக்கைகள் சாட்சிகளைக் கலைக்கவும், சிபிஐ விசாரணையின் நேர்மையைக் குலைக்கவும் வழிவகுக்கும் என திமுக வாதிட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணை முடியும் வரை முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பொதுவெளியில் பேச உச்சநீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
இந்த விவகாரத்தை ஒரு தீவிரமான அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், திமுகவின் மனு மீதான விசாரணையை இன்று (ஜூலை 7) நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் சிபிஐ பலமுறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், நீதிமன்றக் கண்காணிப்பில் இருக்கும் ஒரு வழக்கின் போக்கைத் திசைதிருப்பும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரும் இந்த மனு, தமிழக அரசியல் வட்டாரங்களில் இன்று உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.