தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருதுருவ அரசியல், சமீபத்திய தேர்தல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மிக ஓப்பனாகப் பேசியுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேசியக் கட்சிகள் மற்றும் சில சக்திகள் பின்புலத்திலிருந்து காய் நகர்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “மாநிலத்தில் வலுவாக இருக்கும் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றை முற்றிலும் காலி செய்ய வேண்டும்; இன்னொன்றைத் தனிமைப்படுத்த வேண்டும்” என்ற கணக்கீட்டுடன் திட்டமிட்ட அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகத் திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் ஆளும் முக்கியத் தலைவர்கள் தமிழ்நாட்டில் பிராந்தியக் கட்சிகளின் வலிமையைக் குறைக்கத் துடிப்பதாகத் தனது பேச்சில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, மிகச் சிறிய அளவில் நூறு பேருடன் தொடங்கப்படும் சாதிச் சங்கங்களின் கூட்டங்களுக்குக் கூட, அழைப்பு விடுத்தால் உடனே அமித்ஷா அல்லது பிரதமர் மோடி போன்ற தேசியத் தலைவர்கள் நேரில் வரத் தயாராக இருக்கிறார்கள் என்று சாடியுள்ளார். பிராந்திய உணர்வுகளையும், சாதி மற்றும் மத உணர்வுகளையும் தூண்டிவிட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிதறடிப்பதே அவர்களின் நோக்கம் என்றும், இதன் மூலம் ‘ஒரே கட்சி ஒரே ஆட்சி’ என்ற சர்வாதிகார இலக்கை நோக்கி அவர்கள் நகர்வதாகவும் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
தமிழக வரலாற்றில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலகட்டத்தில் இருந்தே, திமுக-வுக்கு எதிரான வெறுப்பு அரசியல் எவ்வாறெல்லாம் ஊட்டி வளர்க்கப்பட்டது என்பதை அவர் விரிவாகப் பட்டியலிட்டார். அன்று திமுக-வை வீழ்த்த காங்கிரஸும், அதன்பின்னர் உருவான பாமக, மதிமுக போன்ற கட்சிகளும் அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல்களே தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான விதையைப் போட்டன. தொடர்ந்து தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் தற்போது களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரை நிகழ்ந்துள்ள இந்தத் தொடர் அரசியல் தாக்குதல்களால்தான், இன்று திராவிடக் கட்சிகளின் அடித்தளத்தை அசைக்கக்கூடிய ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது.
கடந்த காலங்களில் இருதுருவ அரசியலை உடைக்க முயன்ற வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் அல்லது சீமான் போன்ற தலைவர்களால் அதிகபட்சமாக 8% முதல் 10% வரை மட்டுமே வாக்கு வங்கியைப் பெற முடிந்தது. ஆனால், தற்போது புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், 20% முதல் 30% வரையிலான வாக்கு வலிமையுடன் களம் கண்டு, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சரிவையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளார். இந்த வலுவான மூன்றாவது முனையின் வரவால், காலம் காலமாக மாறி மாறி இரு திராவிடக் கட்சிகளுக்கும் வாக்களித்து வந்த மக்கள், தங்களது வாக்குகளை ஒட்டுமொத்தமாக மாற்றுப் பாதைக்கு மாற்றத் தொடங்கிவிட்டனர் என்று திருமாவளவன் தனது அரசியல் அலசலை நிறைவு செய்துள்ளார்.