Posted in

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம்:  ‘டிரம்பைக் கொல்வோம்’ என மஷ்ஹாத் நகரில் அதிர்வலையை ஏற்படுத்திய பேனர்கள்!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் நீண்டகால உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல், ஆறு நாட்கள் நீடித்த தொடர் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான மஷ்ஹாத் (Mashhad) நகரில் இன்று இறுதி அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா ஆகிய புனித நகரங்களில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, கமேனியின் உடல் விமானம் மூலம் ஈரானுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது, கமேனியின் உடல் வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானத்திற்குப் பாதுகாப்பாக ஈரானிய விமானப் படையின் போர் விமானம் (Fighter Jet) ஒன்று வானில் அணிவகுத்து வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மஷ்ஹாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா புனிதத்தலத்தை நோக்கி கமேனியின் இறுதி ஊர்வலம் நகர்ந்தபோது, கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான ஈரானிய மக்கள் வீதிகளில் திரண்டனர். இந்த ஊர்வலத்தின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை இலக்கு வைத்து ஆங்கிலத்தில் “We Will Kill Trump” (நாங்கள் டிரம்ப்பை கொல்வோம்) என்று எழுதப்பட்ட பிரம்மாண்டமான சிவப்பு நிறப் பேனர்களைப் பொதுமக்கள் ஏந்திச் சென்றனர். கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கக் கோரி, மஷ்ஹாத் நகரின் முக்கிய ஹோட்டல் கட்டிடங்கள் மற்றும் பாலங்களிலும் இந்த எச்சரிக்கை பேனர்கள் தொங்கவிடப்பட்டிருந்ததால் அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவியது.

ஈரானியப் பாரம்பரியத்தில் சிவப்பு நிறக் கொடிகள் மற்றும் பேனர்கள் என்பது, கொல்லப்பட்ட தங்களின் தலைவருக்காகப் பழிவாங்குவதை உறுதி செய்வதன் அடையாளமாகக் கருதப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் இராணுவத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் பழிவாங்கக் கோரி ஆக்ரோஷமாக முழக்கங்களை எழுப்பினர். கமேனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டதால், இந்த இறுதிச் சடங்கு நிகழ்வு ஈரானியர்களிடையே மிகப்பெரிய அமெரிக்க எதிர்ப்பு அலையை உருவாக்கியுள்ளது.

தற்போது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த இறுதிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கமேனியின் இறுதி ஊர்வலத்தில் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி கொலை மிரட்டல், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அமெரிக்க தரப்பில் டிரம்ப் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஏற்கனவே கவலைகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், ஈரானின் மஷ்ஹாத் நகர் சம்பவங்கள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *