ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் (DR Congo) கடந்த சில வாரங்களாகத் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த மே மாதத்தின் பாதியில் இந்த எபோலா பரவல் கண்டறியப்பட்ட நிலையில், மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,759 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 750 நோயாளிகள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இடூரி (Ituri), வடக்கு கிவு (North Kivu) மற்றும் தெற்கு கிவு (South Kivu) ஆகிய மூன்று மாகாணங்களில் மட்டுமே தீவிரமாக இருந்த எபோலா வைரஸ், தற்போது இதுவரை எந்தப் பாதிப்பும் இல்லாத அண்டை மாகாணமான சோப்போவின் (Tshopo) தலைநகரான கிசங்கனிக்கும் (Kisangani) பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிராந்தியங்களில் கண்டறியப்பட்டுள்ள இந்தச் சந்தேகத்திற்குரிய பாதிப்புகள், வைரஸ் பரவலின் அடுத்தக்கட்டப் பாய்ச்சலாகப் பார்க்கப்படுவதால் சர்வதேச சுகாதார அமைப்புகள் மிகுந்த கவலை அடைந்துள்ளன.
இந்த எபோலா அலையானது ‘புண்டிபுகியோ’ (Bundibugyo virus) என்ற அரிய வகை எபோலா வைரஸ் தொற்றால் உருவானது என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கு தற்சமயம் வரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேக மருந்துகளோ முழுமையாகக் கண்டறியப்படாததே இந்த அளவுக்குப் பலி எண்ணிக்கை வேகமாக உயரக் காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது மோனோக்ளோனல் ஆன்டிபாடி (MBP134) மற்றும் ரெம்டெசிவிர் (remdesivir) போன்ற மருந்துகளைக் கொண்டு இதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மருத்துவப் பரிசோதனைகள் அங்கு அவசரகால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன.
காங்கோவின் உள்நாட்டு ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாகச் சென்றடைய முடியாத சூழல் நிலவுவது, தடுப்புப் பணிகளில் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. நோய்த்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால், மருத்துவமனைகளுக்கு வரும் முன்பே பலர் சமூக அளவிலேயே உயிரிழக்கும் அபாயகரமான சூழல் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. எல்லை தாண்டி அண்டை நாடான உகாண்டாவிலும் இந்தத் தொற்று பரவியுள்ளதால் சர்வதேச சமூகத்தின் உடனடி உதவி காங்கோவிற்குத் தேவைப்படுகிறது.