இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் போர்க்கொடி தூக்கிய மாவீரர்களில் ஒருவரான சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாள் இன்று (ஜூலை 11, 2026) தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவீரன் அழகுமுத்து கோனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கமான எக்ஸ் (X) தளத்தில் நெகிழ்ச்சியான வீர வணக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது விடுதலைக் குரலை முதன்முதலாகத் தமிழ் மண்ணில் இருந்து எழுப்பிய மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த நாளில், எனது ஆழ்ந்த மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்திக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், அடக்க முடியாத சுதந்திர வேட்கைக்கும் ஒரு தலைசிறந்த அடையாளமாக மாவீரன் அழகுமுத்து கோன் விளங்குகிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த இந்த மண்ணின் மைந்தரின் வரலாற்றை முதல்வர் நினைவு கூர்ந்துள்ளார் . “அடிமை வாழ்வை விட சுதந்திரமே மிக உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உலகிற்கு உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் மாவீரன் அழகுமுத்துக்கோன்” என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழகத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார் .
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவீரன் அழகுமுத்து கோன் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தவெக அரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி அரசியல் வட்டாரங்களிலும், சமூக அமைப்புகள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் பல்வேறு சமுதாயத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அழகுமுத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் வேளையில், முதல்வரின் இந்த எக்ஸ் (X) பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.