Posted in

டெல்லிக்கு ஸ்டாலின் சொன்ன ‘ஸ்ட்ரிக்ட் நோ’! ஸ்டாலின் போட்ட முட்டுக்கட்டை- அதிருப்தியில் தி.மு.க இரண்டாம் கட்ட தலைவர்கள்!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோதா 2.0’ (Delimitation Bill 2026) விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு திமுக-விடம் பாஜக தலைமை நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தைக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத் திட்டவட்டமாக “நோ” சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார். “பாஜக-வுடன் தற்போதைக்கு மட்டுமல்ல, எப்போதுமே கூட்டணியோ அல்லது நாடாளுமன்ற ஆதரவோ கிடையாது” என டெல்லி தலைமைக்குச் சவுக்கடி பதில் கொடுத்துள்ளார் ஸ்டாலின். ஆனால், இந்த அதிரடி முடிவில் திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு உடன்பாடு இல்லை என்ற அதிரடித் தகவல் தற்போது அறிவாலய வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது.

மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்ற நினைக்கும் பாஜக, ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதைச் சாதகமாகப் பயன்படுத்தி, திமுக எம்பி கனிமொழி மூலமாக முதல்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் போது, பாஜக-வின் சலுகைகள் மற்றும் மசோதாவின் சாதகங்களை விவரித்த தூதுவர்களிடம், “எதுவாக இருந்தாலும் எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவுதான் இறுதியானது” எனக் கனிமொழி பிடிகொடுக்காமல் பேசியுள்ளார். இந்த விவகாரம் ஸ்டாலினின் கவனத்திற்குச் சென்ற உடனேயே, தென் மாநிலங்களின் எம்பி இடங்களைக் குறைக்கும் இந்த மசோதாவை எந்த வடிவிலும் ஆதரிக்க முடியாது என்று கூறி பாஜக-வின் தூதுவர்களைத் திருப்பி அனுப்பியுள்ளார்.

திமுக-வின் இந்த பிடிவாதமான பதிலால் பாஜக-வுக்குப் பெரிய அதிர்ச்சி ஏதும் இல்லை என்றாலும், காங்கிரஸ் இருக்கும் இடத்திற்குத் தாங்கள் வரப்போவதில்லை என்கிற திமுக-வின் தற்போதைய தனி ஆவர்த்தன நிலைப்பாட்டை நினைத்துத் தாமரை கட்சித் தலைமை நிம்மதியடைந்துள்ளது. அதாவது, தாங்கள் இனி இந்தியா கூட்டணியின் அங்கமாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியதன் மூலம், நாடாளுமன்றத்தில் மசோதாக்களின் “மெரிட்” (Merit) அடிப்படையில் மட்டுமே திமுக தனித்து முடிவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அதேநேரம், மத்திய பாஜக அரசின் மறைமுக ஆதரவு மற்றும் ‘நட்பு’ திமுக-வுக்கு இருக்கிறது என்பது வெளியில் தெரிந்தாலே, தமிழ்நாட்டில் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் முதல்வர் விஜய் கொடுக்கும் அரசியல் நெருக்கடிகளை எளிதாகச் சமாளித்துவிடலாம் என்பது திமுக முன்னாள் அமைச்சர்களின் கணக்காக இருக்கிறது. இதே யோசனையைச் சிலர் அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் கொண்டு சென்றபோது, “பாஜக-வுக்குச் சொன்ன அதே பதில்தான் உங்களுக்கும்; கொள்கையில் சமரசம் செய்ய முடியாது” எனத் தலைமை கறாராகக் கூறிவிட்டதாம். இதனால், தவெக அரசின் அதிரடிகளை எதிர்கொள்ள டெல்லியின் துணை தேவை என நினைத்த திமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தற்பொழுது பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *