Posted in

ஆண்ட்ரூவுக்கு பதவி தர துடித்த ராணி எலிசபெத்; தகுதி சரிபார்ப்பு கூட நடக்கவில்லை!

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor), கடந்த 2001 முதல் 2011 வரை பிரிட்டனின் சர்வதேச வர்த்தகத் தூதராகப் (UK Trade Envoy) பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) இணைந்து கொண்டு அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாக ஆண்ட்ரூ மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் நாடாளுமன்றத்தின் உத்தரவின் பேரில், ஆண்ட்ரூவின் நியமனம் குறித்த ரகசிய அரசு ஆவணங்கள் தற்போது லண்டனில் வெளியிடப்பட்டு மாபெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன.

வெளியாகியுள்ள வரலாற்று ஆவணங்களின்படி, கடந்த 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டன் வர்த்தக அமைப்பின் அப்போதைய முதன்மை நிர்வாகி சர் டேவிட் ரைட், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய ரகசிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “தேசிய நலன்களை சர்வதேச அளவில் மேம்படுத்துவதில் இளவரசர் ஆண்ட்ரூ ஒரு முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதில் ராணி எலிசபெத் மிகத் தீவிரமாக (Very keen) உள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராணியின் இந்த அதீத விருப்பமே, தகுதி இல்லாத ஆண்ட்ரூவிற்கு இவ்வளவு பெரிய முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதன் பின்னணி என்பதை இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயமாக, உலக நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுடன் நெருங்கிப் பழகும் அதிகாரம் கொண்ட இந்த வர்த்தகத் தூதர் பதவிக்கு ஆண்ட்ரூவை நியமிக்கும் முன்பாக, எந்தவிதமான முறையான பின்னணி சரிபார்ப்போ அல்லது தகுதி ஆய்வோ (Formal vetting or due diligence) செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய பிரிட்டன் வர்த்தகத் துறை அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் நாடாளுமன்றத்தில் பேசுகையில், ஆண்ட்ரூவின் நியமனத்திற்கு முன்பு எந்தவொரு பாதுகாப்பு சரிபார்ப்பும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அரசிடம் இல்லை என்றும், அதுகுறித்து அதிகாரிகள் யோசிக்கக்கூட இல்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே எந்தக் கேள்வியும் கேட்காமல் இத்தகைய உணர்வுப்பூர்வமான பதவி வழங்கப்பட்டது பிரிட்டன் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆண்ட்ரூ அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘பாம்ஷெல்’ (Bombshell) ஆவணங்கள் மறைந்த ராணி எலிசபெத்தின் புகழுக்கும், பிரிட்டன் அரச நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மைக்கும் ஒரு மாபெரும் கறையாக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.