Posted in

நடுவானில் மரண பயம்: அவசரக் கதவைத் திறந்து குதிக்க முயன்ற பயணி!

அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Frontier Airlines) பயணிகள் விமானத்தில், நடுவானில் 32,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் திடீரென அவசரக் கால கதவைத் திறந்து வெளியே குதிக்க முயன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் விமானத்திற்குள் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் மரண பயத்தில் உறைந்து போயினர். நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, விமானத்தை அவசரமாக மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் விமானிகளுக்கு ஏற்பட்டது.

விசாரணையில், இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் புளோரிடாவைச் சேர்ந்த வான் கேப்ரியல் ரெய்ஸ் (51) என்பது தெரியவந்துள்ளது. விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களிலேயே இவரது அத்துமீறல்கள் தொடங்கியுள்ளன. விமானப் பணிப்பெண்களின் எச்சரிக்கையையும் மீறி, விமானத்தின் கழிவறைத் தரையில் சிறுநீர் கழித்த அவர், திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறை (Cockpit) கதவை நோக்கி ஓடிச் சென்று அதை உடைக்க முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவரைத் தடுத்து தங்களது இருக்கைக்கு அனுப்பினாலும், அடுத்த சில நிமிடங்களில் “நான் இங்கிருந்து இறங்க வேண்டும்” என்று கத்திக்கொண்டே அவசரக் கால எக்ஸிட் (Emergency Exit) கதவை பலவந்தமாகத் திறக்க முயன்றுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அதே விமானத்தில் சிகாகோவைச் சேர்ந்த முன்னாள் தொழில்முறை கலப்பு மல்யுத்த (MMA) வீரரான ஜோஷ் லாங்குட் என்பவர் பயணம் செய்துள்ளார். நிலைமையைப் புரிந்து கொண்ட லாங்குட், ஜியு-ஜித்சு (Jiu-Jitsu) தற்காப்புக் கலை பாணியில் நொடிப் பொழுதில் பாய்ந்து சென்று, அந்தப் பயணியை விண்டோ சீட் பக்கம் அமுக்கிப் பிடித்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். ரெய்ஸ் அங்கிருந்த மற்றொரு விமான ஊழியரின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற போது, சக பயணிகளும் லாங்குட்டுடன் இணைந்து கொண்டு, விமானத்தில் இருந்த சிறப்பு விலங்குகளைப் (Flex Cuffs) பயன்படுத்தி அந்தப் பயணியைக் இருக்கையோடு சேர்த்து கட்டிப் போட்டனர்.

விமானம் மியாமியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும், மியாமி-டேட் கவுண்டி போலீசாரும் எஃப்பிஐ (FBI) அதிகாரிகளும் விமானத்திற்குள் நுழைந்து வான் கேப்ரியல் ரெய்ஸை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது விமான ஊழியர்களைத் தாக்கியது மற்றும் விமானப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சுமார் 43,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.