Posted in

சாதிய தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்த TVK : 21 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மற்றம்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில் அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில், கடந்த 21 ஆண்டுகாலமாக நீடித்து வந்த சாதிய பாகுபாடு மற்றும் மறைமுகத் தீண்டாமைக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காந்திபுரத்திலிருந்து கெம்பனூர் வரை இயக்கப்பட்டு வந்த தடம் எண் 21 (Route 21) அரசுப் பேருந்து, ஆதிக்க சாதியினரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அண்ணா நகர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்லாமல் கடந்த இரண்டு தசாப்தங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் அதிரடி நடவடிக்கையால் அண்ணா நகர் பகுதிக்குள் மீண்டும் அரசுப் பேருந்து சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணா நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கிருந்து வெறும் 400 மீட்டர் தொலைவில் உள்ள கெம்பனூர் வரை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. அண்ணா நகருக்குள் பேருந்தை இயக்கினால், தொடக்க நிறுத்தத்திலேயே பட்டியலின மக்கள் அனைத்து இடங்களையும் பிடித்துக் கொள்வார்கள் என்றும், அதற்கு அடுத்த நிறுத்தங்களில் ஏறும் ஆதிக்க சாதியினர் அவர்களின் முன்னிலையில் நின்று கொண்டே பயணம் செய்ய நேரிடும் என்றும் கூறி மாற்றுத் தரப்பினர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த பேருந்து நீட்டிப்புக்குத் தடை ஏற்படுத்தினர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தினமும் 1 கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்தது.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, இடதுசாரி அமைப்புகள், விசிக மற்றும் தவெக போன்ற அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தின. மேலும், தமிழ்நாடு எஸ்சி/எஸ்டி ஆணையம் மற்றும் தேசிய பட்டியலின ஆணையம் ஆகியவை கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரின. இந்தச் சூழலில், கடந்த மே 30-ம் தேதி கோவைக்குக் கள ஆய்வு மேற்கொள்ள வந்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களிடம் அண்ணா நகர் மக்கள் தங்களின் நிலையை நேரில் விளக்கி மனு அளித்தனர். இதனைத் தீண்டாமைப் பழக்கமாகக் கருதி தீவிரமாக அணுகிய அமைச்சர், சாதிய அழுத்தங்களுக்குப் பணியாமல் அசல் வழித்தடத்தின்படி பேருந்தை இயக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுப் போக்குவரத்து கழகத்திற்கும் (TNSTC) அதிரடி உத்தரவிட்டார்.

அமைச்சரின் இந்தத் திட்டவட்டமான உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த சனிக்கிழமை காலை தடம் எண் 21 அரசுப் பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா நகர் பட்டியலினப் பகுதிக்குள் கம்பீரமாக நுழைந்தது. பல வருடப் போராட்டத்திற்குப் பிறகு தங்களின் பகுதிக்கு வந்த பேருந்தை அண்ணா நகர் மக்கள், விசிக, தவெக மற்றும் முற்போக்கு அமைப்புகளின் தொண்டர்களுடன் இணைந்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். மேலும், அமைச்சர் வன்னி அரசு அவர்களுடன் மக்கள் வீடியோ கால் மூலம் பேசி தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.