Posted in

திருத்தனி பயங்கரம்: ஆடு மேய்க்காத சிறுவன் அடித்துக் கொலை; சடலத்தை தோண்டி எடுத்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அருகே ஆடுகளைச் சரியாக மேய்க்கவில்லை எனக் கூறி, 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுப் பண்ணையிலேயே புதைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்டுப் பண்ணை உரிமையாளர் முருகன் மற்றும் அவரது உதவியாளர் வினோத் ஆகியோரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த அதிர்ச்சி கொலைச் சம்பவம், நான்கு மாதங்களுக்குப் பின் தற்போதுதான் காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்திரா நகரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண், தனது மூன்று மகன்களுடன் திருத்தனி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்குச் சொந்தமான ஆட்டுப் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பண்ணை உரிமையாளர் இல்லாத சமயத்தில், வெண்ணிலாவின் மூத்த மகனான சுரேஷ் (15) பண்ணைப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டுள்ளார். அப்போது சில கால்நடைகள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பண்ணை உரிமையாளர் முருகன், சிறுவன் சுரேஷைச் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

கொலையை மறைப்பதற்காக, முருகன் தனது உதவியாளர் வினோத்துடன் சேர்ந்து சிறுவன் சுரேஷின் சடலத்தைக் காம்பவுண்ட் சுவருக்குள்ளேயே குழிதோண்டிப் புதைத்துள்ளார். அதுமட்டுமன்றி, இந்த விபரீதம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகச் சிறுவனின் தாய் வெண்ணிலாவை அங்கிருந்த ஒரு அறையில் கைகள் மற்றும் கால்களைக் கட்டிப் போட்டுச் சித்திரவதை செய்துள்ளனர். “வெளியில் சொன்னால் உன்னையும் உன் மகனைப் போலவே சாவடித்துவிடுவோம்” எனத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகத் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

சமீபத்தில் அந்தப் பண்ணையிலிருந்து தப்பித்து வெளியே வந்த வெண்ணிலா, திருத்தனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நேற்று வட்டாட்சியர் (Tahsildar) மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் முன்னிலையில், பண்ணையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே மருத்துவர்களால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் பண்ணையில் வேலை செய்த வேறு சில பெண்களுக்கும் தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும், கொலைக்கு என்ன மாதிரியான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.