இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புவார்: பாலிவுட் நடிகை



சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகை குஷி முகர்ஜியின் சர்ச்சை 

பாலிவுட் நடிகையும், 'எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா' (MTV Splitsvilla) புகழ் பெற்றவருமான குஷி முகர்ஜி, சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சூர்யகுமார் யாதவ் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புவார் எனக் கூறி அதிர வைத்துள்ளார். "சூர்யகுமார் யாதவ் எனக்கு நிறைய மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது நாங்கள் அதிகம் பேசிக் கொள்வதில்லை. எனக்கு எந்தவொரு கிரிக்கெட் வீரருடனும் தொடர்பு வைத்துக்கொள்ள விருப்பமில்லை" என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஷி முகர்ஜி தனது பேட்டியில், தமக்கும் சூர்யகுமார் யாதவிற்கும் இடையே எந்தவொரு காதல் உறவும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். "எனக்கு கிரிக்கெட் வீரர்கள் மீது எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் பல கிரிக்கெட் வீரர்கள் என்னைத் துரத்துகிறார்கள். சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் செய்தது பழைய கதை, தற்போது அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை. என் பெயருடன் எவரையும் இணைத்துப் பேசுவதை நான் விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் ரசிகர்களிடையே கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது பதிலோ அளிக்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் கடந்த 2016-ஆம் ஆண்டு தேவிஷா ஷெட்டியைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் களத்தில் அவர் தற்போது டி20 கேப்டனாகத் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இத்தகைய சர்ச்சைகள் அவர் மீது எழுப்பப்படுவது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

குஷி முகர்ஜி 2013-ஆம் ஆண்டு 'அஞ்சல் துறை' (Anjal Thurai) என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்தார். இருப்பினும், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அவரது அதிரடியான கருத்துக்களே அவரை அடிக்கடி செய்திகளில் இடம்பெறச் செய்கின்றன. தற்போது சூர்யகுமார் யாதவின் பெயரைப் பயன்படுத்தி அவர் விளம்பரம் தேட முயல்வதாகச் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் வேளையில், அணியின் கேப்டன் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், சூர்யகுமார் யாதவ் சர்வதேசப் போட்டிகளில் சமீபகாலமாக ரன் குவிக்கத் திணறி வருவதால், அவரது ஆட்டம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சையும் இணைந்துள்ளது. இது தற்காலிகச் சலசலப்பாக முடிந்துவிடுமா அல்லது அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post