BREAKING NEWS: Iran hits Dubai's International Financial Centre டுபாயின் சர்வதேச வர்த்தக நிலையம் மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அதிகாலை துபாயின் இதயப்பகுதியான சர்வதேச நிதி மையத்தை (DIFC) இலக்கு வைத்து ஈரான் காமிகேஸ் (Kamikaze) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ட்ரோன்களை நடுவானில் இடைமறித்து அழித்தாலும், சிதறிய பாகங்கள் விழுந்ததில் நிதி மையத்தில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. நகரின் வான்பரப்பில் அடர்ந்த கரும்புகை சூழ்ந்த நிலையில், இந்தத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிறிய அளவிலான சேதங்களே ஏற்பட்டுள்ளதாகவும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, ஈரான் மேற்கத்திய நிதி நிறுவனங்களைத் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையால் துபாயில் உள்ள வங்கிகள் தங்கள் ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவம் "Operation Epic Fury" என்ற பெயரில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது மிகப்பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டெஹ்ரானில் உள்ள இமாம் ஹுசைன் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) நிலத்தடி ஏவுகணை ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் தளத்தை இஸ்ரேல் அழித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. டெஹ்ரான், ஷிராஸ் மற்றும் அஹ்வாஸ் ஆகிய நகரங்களில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மறுபுறம், ஈராக் நாட்டில் உள்ள எர்பில் (Erbil) இராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட வீரர் அர்னாட் பிரியன் (Arnaud Frion) என அடையாளம் காணப்பட்டுள்ளார். "ஈரானுடனான போர் இதுபோன்ற தாக்குதல்களை நியாயப்படுத்தாது" என்று மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சுப் படைகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பிரான்ஸ் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈராக்கின் மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்ட விபத்து அல்ல என்றும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது மோதலால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய மற்ற இரண்டு வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஓமான் நாட்டின் சோஹர் (Sohar) பகுதியில் உள்ள தொழில்பேட்டை மீது ட்ரோன்கள் விழுந்து வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல், சவூதி அரேபியா தனது வான்பரப்பில் ஊடுருவ முயன்ற 28 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. உலகின் பாதுகாப்பான சொர்க்க பூமியாகக் கருதப்பட்ட துபாய் மற்றும் அதன் சுற்றுவட்டார நாடுகள் தற்போது போர்க்களமாக மாறி வருவதால், சர்வதேச சுற்றுலா மற்றும் முதலீடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments: