சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 316-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆனால், இந்த அரசு விழ மேடையில் தவெக அமைச்சரவைக்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களும், அதிகாரப் போட்டிகளும் பகிரங்கமாக வெளிப்பட்டு, அங்கு குழுமியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குழுவாக வந்து அரசு விழாக்களில் மரியாதை செலுத்துவதுதான் மரபு. ஆனால், கட்டாலங்குளத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஸ்ரீநாத், மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த இதர தவெக அமைச்சர்கள் எவ்வித ஒருங்கிணைப்பும் இன்றி தனித்தனி வாகனங்களில், வெவ்வேறான நேரங்களில் வந்து இறங்கினர். அமைச்சர்கள் தங்களுக்குள் இருக்கும் அதிருப்தி காரணமாகவே ஒன்றாக வராமல் தனித்தனியாக வந்து தங்களது பலத்தைக் காட்ட முயன்றதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
விழா பந்தலில் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தனித்தனியாகக் கோஷங்களை எழுப்பியதால், நினைவிட வளாகமே தவெகவின் கோஷ்டி மோதல் களமாக மாறியது. ஒரு அமைச்சரின் ஆதரவாளர்கள் கோஷம் போடும் போது, மற்றொரு அமைச்சரின் ஆதரவாளர்கள் அதற்குப் போட்டியாகக் கோஷமிட்டதால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்படும் சூழல் உருவானது. அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், தவெக அமைச்சர்களுக்கு இடையே புகைந்து வரும் இந்த மோதல் போக்கு தற்பொழுது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடியில் திமுக எம்பி கனிமொழியைப் போலீசார் தடுத்து நிறுத்தி நடக்க வைத்த விவகாரத்தில் தவெக அரசு மீது கடுமையான விமரிசனங்கள் எழுந்துள்ள நிலையில், தற்பொழுது சொந்தக் கட்சியின் அமைச்சர்களே விழா மேடையில் மோதிக் கொண்டது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அமைச்சர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த ஈகோ (Ego) மோதல்கள், கட்சியின் கட்டுப்பாட்டை பலவீனப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பனையூர் தலைமை அலுவலகம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விளக்கம் கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.