தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பித்து, ஏழை எளிய மக்களுக்குத் தரமான மற்றும் சுவையான உணவுகளைத் தடையின்றி வழங்க வேண்டும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, சேலம் மாநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் 11 அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைத்து, அவற்றை நவீனமயமாக்குவதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மிகத் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாகச் சரியான பராமரிப்பின்றி இருந்த இந்த உணவகங்கள் தற்போது புதிய பொலிவைப் பெறத் தொடங்கியுள்ளன.
சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, சூரமங்கலம், மணியனூர், அம்மாப்பேட்டை உட்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் தினமும் காலையில் இட்லி 1 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தினமும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள், தினக்கூலிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இந்த உணவகங்கள் மூலம் பசியாறி வரும் நிலையில், தவெக அரசு ஒதுக்கியுள்ள இந்த நிதியானது அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1.10 கோடி நிதியைக் கொண்டு, அனைத்து உணவகங்களுக்கும் புதிய வர்ணம் பூசுதல், பழுதடைந்த மின்விசிறிகளை மாற்றுதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரங்கள் நிறுவுதல் மற்றும் புதிய சமையல் பாத்திரங்களை வாங்குதல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மணியனூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு மட்டும் கூடுதலாகப் புதிய அறைகள் கட்டவும் சமையல் உபகரணங்கள் வாங்கவும் ரூ.20.5 லட்சமும், சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள உணவகத்திற்கு ரூ.20 லட்சமும் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டு உள்கட்டமைப்புகள் தலைகீழாக மாற்றப்பட்டு வருகின்றன.
அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி, முந்தைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட ஏழைகளுக்கான இத்திட்டத்தைத் தவெக அரசு தொடர்ந்து செயல்படுத்துவதோடு, அதற்குத் தனி நிதி ஒதுக்கி மேம்படுத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளைத் தட்டுப்பாடின்றி முழு அளவில் வழங்குவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அங்கு பணிபுரியும் சுய உதவிக்குழுப் பெண்களும், சாப்பிட வரும் நுகர்வோரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.