Posted in

ரூ.70,000-க்கு ஆசைப்பட்டு கையை நீட்டிய போலீஸ் அதிகாரி! உக்கடத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் மெய்யுமாக மாட்டிய பூபதி!

வழக்கை முடித்து மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்கு ரூ.70,000 லஞ்சம் வாங்கிய கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) பூபதியை, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசார் உக்கடம் பேருந்து நிலையம் அருகே வைத்து கையும் மெய்யுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்த பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவர் வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசியைச் சேர்ந்த ருஜைனா பாத்திமா என்பவர், தனது கணவரின் எஸ்யூவி (SUV) ரக காரை நெல்லையைச் சேர்ந்த ரவிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தார். பின்னர் காரில் இருந்த ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் அந்த கார் கோவையில் இருப்பதை அறிந்து, மாற்றுச் சாவியைப் பயன்படுத்தித் தம்பதியினர் காரை மீட்டுப் பொள்ளாச்சியில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காட்டூர் போலீசார், காரை மீட்டதோடு விசாரணைக்காகப் பாத்திமாவின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

இதன்பின்னர் பாத்திமா, ரவிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்திப் பணத்தைக் கொடுத்து காரைத் திரும்பப் பெற்றார். இருப்பினும், இந்த வழக்கைக் கோர்ட்டுக்கு அனுப்பாமல் முடிப்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களைத் திரும்பத் தருவதற்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி ரூ.70,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாத்திமா, இதுகுறித்து கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியமாகப் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின்படி, வேதிப்பொருள் (பினோப்தலீன்) தடவிய ரூ.70,000 பணத்துடன் அவர் நேற்று மாலை பூபதியைச் சந்திக்கச் சென்றுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மறைந்திருந்து கண்காணித்த சூழலில், உக்கடம் பேருந்து நிலையம் அருகே வைத்து பாத்திமாவிடம் இருந்து ரூ.70,000 பணத்தை எஸ்எஸ்ஐ பூபதி வாங்கியுள்ளார். அவர் கையில் வாங்கிய அடுத்த நொடியே, அங்கு சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான போலீசார், பூபதியை ரசாயன சோதனைகள் மூலம் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கைது செய்தனர். தவெக தலைமையிலான புதிய அரசு லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், கோவை மாநகரிலேயே காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டது மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *