Posted in

 20-வது நாள் உண்ணாவிரதத்தில் சோனம் வாங்சுக் மீது தாக்குதல் முயற்சி? டெல்லியில் வெடித்த பெரும் கலவரம்!

நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து 20 நாட்களாகத் தீவிர உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வரும் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் (Sonam Wangchuk) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) தலைவர் அபீஜித் திப்கே, “அமைதியான முறையில் நடந்து வரும் போராட்டத்தைக் கலைக்க அரசு அனுப்பிய ஆட்களால் சோனம் வாங்சுக் குறிவைக்கப்பட்டுள்ளார்” என்று சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார்.

போராட்டக் களத்தில் நேற்று திடீரென நுழைந்த சில சமூக விரோதிகள், மேடையில் நின்றிருந்த 59 வயதான சோனம் வாங்சுக் மீது சில பொருட்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த அராஜகத் தாக்குதலில் அவருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், ஜந்தர் மந்தர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. “போலீஸ் துறையில் இருக்கும் உள்விவரம் தெரிந்த நபர் ஒருவர் மூலமாக, இப்போராட்டத்தைக் குலைக்க ரவுடிக் கும்பல் அனுப்பப்படும் என்று எனக்கு முன்பே எச்சரிக்கை கிடைத்தது” என்று கூறியுள்ள அபீஜித் திப்கே, சோனம் வாங்சுக்கிற்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொந்தளித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சர்ச்சை வெடித்த சில மணி நேரங்களிலேயே, 21-வது நாளில் அடி எடுத்து வைத்த சோனம் வாங்சுக்கை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாகப் போராட்டக் களத்திலிருந்து தூக்கிச் சென்று சஃப்தர்ஜங் மருத்துவமனையில் (Safdarjung Hospital) அனுமதித்துள்ளனர். 20 நாட்களாக உணவு உட்கொள்ளாததால் வாங்சுக்கின் உடல்நிலை மிக மோசமடைந்து, உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்ததையும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அவசர உத்தரவையும் சுட்டிக்காட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்கள் மற்றும் சிஜேபி (CJP) தொண்டர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி (Lathi Charge) நடத்தியதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மோதலின் போது, டெல்லி போலீசாரால் தான் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபீஜித் திப்கே எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். நீட் முறைகேடு வழக்கில் மாணவர்களுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்துப் போராடும் வாங்சுக்கிற்கு ஆதரவாக அருந்ததி ராய், சோயா அக்தர், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பிரபலங்கள் தங்களின் ஆதரவுக் குரலை ஒழித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி வரும் ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், தங்களின் பிரம்மாண்ட “சலோ சன்சாத்” (நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்) பேரணி கண்டிப்பாகத் தொடரும் என வாங்சுக் தரப்பு பிடிவாதமாக அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *