Posted in

உங்க மாமனார் ஏன் கொடுத்தாரு? உங்க அப்பா ஏன் வாங்குனாரு? – சட்டப்பேரவையில் காரசாரமாக மோதிக்கொண்ட ஆதவ் – உதய்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் டாஸ்மாக் ஊழல் மற்றும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே தனிப்பட்ட ரீதியிலான காரசார வார்த்தை மோதல் ஏற்பட்டு அவையில் பெரும் அமளியை உருவாக்கியுள்ளது.

சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் மதுபானக் கொள்கை தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்த்தரப்பிலிருந்து தேர்தல் பத்திரங்கள் மற்றும் நிதியாதாரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, லாட்டரி நிறுவனத்திடமிருந்து ₹900 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

ஆதவ் அர்ஜுனாவின் இந்த வினாவுக்குத் உடனடியாகப் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “அந்த நிதியைக் கொடுத்தது உங்கள் மாமனார்தான் ; எனவே அவரிடமே போய் கேளுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார். உதயநிதியின் இந்த விமர்சனத்திற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா, “அவர் ஏன் கொடுத்தார் என்பது அவருக்கும் உங்கள் அப்பாவுக்கும்தான் தெரியும்; உங்க அப்பா ஏன் வாங்கினாருன்னு அவர்கிட்டதான் கேட்கணும். அவர் இங்கே இல்லை, வீட்டிற்குப் போய் உங்க அப்பாவிடம் கேளுங்கள்” என்று கூறினார்.

இவ்வாறாக இருவரும் தங்களது குடும்பத்தினரைக் குறிப்பிட்டுத் தனிப்பட்ட முறையில் மாறி மாறி உரத்த குரலில் காரசாரமாகப் பேசியதால், பேரவையில் இருதரப்பு உறுப்பினர்களிடையேயும் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது. பின்னர் சபாநாயகரின் தலையீட்டைத் தொடர்ந்து விவாதம் மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.