அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி (Pam Bondi), சர்ச்சைக்குரிய பில்லியனர் ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான கோப்புகளை வெளியிட்ட விவகாரத்தில் சில திருத்தத் தவறுகள் (redaction errors) நடந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் (House Oversight Committee) மூடிய கதவுகளுக்குப் பின்னாலிலான விசாரணையில் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது, எப்ஸ்டீன் கோப்புகளை கையாண்ட விவகாரத்தில் தனது தலைமையிலான நீதித்துறை சட்டப்படி துல்லியமாகவே செயல்பட்டதாக அவர் வாதிட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதாக பாம் பாண்டி தெரிவித்தார். சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி மிகவும் சிக்கலானது என்று குறிப்பிட்ட அவர், இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டையும் தான் நேரடியாகக் கண்காணிக்கவில்லை என்றும், அப்போதைய துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் (Todd Blanche) என்பவரிடமே இப்பொறுப்பை ஒப்படைத்திருந்ததாகவும் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கமளித்தார்.
இருப்பினும், இந்த கோப்புகள் வெளியான விதம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் நிர்வாணப் புகைப்படங்கள் போன்ற ரகசியத் தகவல்கள் முறையாக மறைக்கப்படாமல் (redact செய்யப்படாமல்) பொதுவெளியில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் விவரங்கள் சில மறைக்கப்பட்டதாகக் கூறி, இந்த வெளியீடு ஒரு “கண் துடைப்பு” என்று ஜனநாயகக் கட்சியினரும் எப்ஸ்டீன் வழக்கிலிருந்து தப்பிய பாதிக்கப்பட்ட பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விசாரணை முழுமையாகப் பதிவு செய்யப்படாமலும், நீதிமன்ற சத்தியப்பிரமாணப் பிரகடனம் இல்லாமலும் ரகசியமாக நடத்தப்பட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண்களின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், டொனால்ட் டிரம்ப் இதில் தலையிட்டாரா என்ற கேள்விகளுக்கு பாம் பாண்டி பதிலளிக்க மறுத்துவிட்டார். சமீபத்தில் தனக்கு தைராய்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்த பாம் பாண்டி, எப்ஸ்டீன் வழக்கை கையாண்ட விதம் காரணமாகவே அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.