தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக கூட்டணி புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவின் வெற்றியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் திமுக தலைவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தவெகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் ஒன்றில் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். தவெகவின் வெற்றி என்பது சினிமா கவர்ச்சியால் வந்தது அல்ல, அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டுகால வாரிசு மற்றும் மன்னராட்சிக்கு எதிராகப் பெண்களும் இளைஞர்களும் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று அவர் முழங்கியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, திமுகவின் வரலாற்றுப் பின்னணியைச் சுட்டிக்காட்டி கடுமையான கேள்விகளை எழுப்பினார். “அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் 50 ஆண்டுகாலம் கட்டிங் காப்பாற்றிய இயக்கம் திமுக. திமுக தனது வரலாற்றில் பல தேர்தல்களில் தோற்றிருக்கலாம், ஆனால் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது எப்போதுமே தோற்றது கிடையாது. மு.க.ஸ்டாலின் அவர்களே, முதலமைச்சராக இருந்தும் உங்களுக்கு இந்தத் தோல்வி ஏன் ஏற்பட்டது என்பதைத் திரும்பிச் சிந்தித்துப் பாருங்கள்” என்று அவர் நேரடியாகச் சாடினார்.
மேலும், தவெகவின் வெற்றியைச் சினிமா கவர்ச்சி என்று கொச்சைப்படுத்துவது தமிழக வாக்காளர்களையும், குறிப்பாக தவெகவிற்கு வாக்களித்த லட்சக்கணக்கான தாய்மார்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார். “வாரிசு அரசியல் மற்றும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தேர்தல் களம் அமைந்தது. பிறப்பால் மட்டுமே ஒரு முதலமைச்சர் உருவாகக் கூடாது என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருந்தனர். உதயநிதி ஸ்டாலினைச் சினிமாவில் முன்னிறுத்தியபோது வராத கவர்ச்சியா, தற்போது மக்கள் மாற்றத்தை விரும்பியபோது வந்துவிட்டது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் வெற்றி பெற்ற பிறகு அமைதியாக அரசு நிர்வாகத்திற்குள் நுழைந்து, 50 ஆண்டுகால ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, திமுக தொடர்ந்து தவெகவை வம்புக்கு இழுத்தால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தார். “நான் இங்கு அமைச்சராகப் பேச வரவில்லை, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டனாகப் பேசுகிறேன்; கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் விஜய்யிடம் அனுமதி பெற்று திமுகவின் அவதூறுகளுக்கு விரைவில் மேடைகளிலேயே தக்க பதிலடி கொடுப்போம்” என்று அவர் பேசியது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.