Posted in

கலிபோர்னியா தீயை அணைக்க.. விமானத்தில் கொட்டப்படும் நீர்.. கூடவே சிவப்பு பொடியை போடுவது ஏன்?

கலிபோர்னியா தீயை அணைக்க.. விமானத்தில் கொட்டப்படும் நீர்.. கூடவே சிவப்பு பொடியை போடுவது ஏன்? - Image 1
📅 வெளியானது: January 12, 2025 | இற்றைப்படுத்தப்பட்டது: April 5, 2026

 

கலிபோர்னியா தீயை அணைக்க.. விமானத்தில் கொட்டப்படும் நீர்.. கூடவே சிவப்பு பொடியை போடுவது ஏன்? - Image 1

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்டு உள்ள பயங்கர காட்டுத்தீயை அணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிதான் இந்த தீயால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுத் தீ பரவுகிறது. குறைந்தது 11 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளதால் அங்கே மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயிலேயே இதுதான் மிக மோசமானது என்று அமெரிக்கா வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் கடந்த 4 நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. ஒரு சில கான்கிரீட் கட்டிடங்கள் தவிர மற்ற எல்லாம் எரிந்துவிட்டது. வரும் நாட்களில் தீ மேலும் பரவும்.. இதனால் காலநிலை கூட மொத்தமாக மாறும்.. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 பெரும் இழப்பு: லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி சுமார் 153,000 பேர் வெளியேறி உள்ளனர். மேலும் 166,000 குடியிருப்பாளர்கள் இன்றும் நாளையும் வெளியேறுவார்கள். பசிபிக் பாலிசேட்ஸ் மற்றும் ஈட்டன் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 10,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயினால் அழிந்துள்ளன. இவை LA வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ ஆகும். இன்னும் இந்த தீயால் 1,60,000 பேர் ஆபத்தில் உள்ளனர். சேதமடைந்த சொத்துகளின் அதிக மதிப்பு காரணமாக கிட்டத்தட்ட $8bnக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவப்பு பொருள்: இந்த நிலையில் கலிபோர்னியாவில் தீயை அணைக்க விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் மூலம் நீர் தெளிக்கப்படுகிறது. அதோடு சேர்த்து சிவப்பு நிற கலர் பொடியும் பயன்படுத்தப்படுகிறது. இது நேரடியாக தீயை அணைக்க பயன்படுத்தப்படாது. மாறாக தீ ஏற்பட்ட பகுதிக்கு அருகே கொட்டப்படும்.

 அங்கே தீ பரவாமல் இருக்க பயன்படுத்தப்படும். அதேபோல் இனி எங்கெல்லாம் விமானங்களில் நீர் தெளிக்க வேண்டும் என்று அடையாளம் காண உதவும். ஆனால் இந்த சிவப்பு கெமிக்கல் பொடி காய்கறிகள், பழங்கள் உள்ள மரங்களில் தெளிக்கப்பட்டால் அதனால் அதை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதோடு பலருக்கும் இந்த பவுடர் மூலம் சுவாச பிரச்சனைகள் கூட ஏற்படும். இதனால் ஏற்பட்ட புகை நியூயார்க் நகரத்தில் கூட பரவி உள்ளது. 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

 இதுவரை 750 கோடிக்கும் அதிகமாக இதனால் செலவு ஆகி உள்ளது. எவ்வளவு இழப்பு என்று தீ அணைந்த பின்பே கண்டுபிடிக்க முடியும். 4700 கோடிக்கும் அதிகமாக கண்டிப்பாக இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அங்கே தீயை அணைக்க போதுமான ஊழியர்கள் இல்லை என்பதால் ஓய்வு பெற்ற 600 ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அங்கே தீயை அணைப்பதில் அதிபர் பிடன் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *