சென்னை பிராட்வே பகுதியில் காய்கறி வாங்கச் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மற்றும் அவரது 14 வயது மகள் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. “போலீஸாக இருந்தால் என்ன, அடிங்க!” என்று கூச்சலிட்டபடி, சீருடையில் இல்லாத பெண் காவலரைச் சூழ்ந்து கொண்டு கும்பலாகத் தாக்கும் பயங்கரமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் ரேவதி, சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மெரினா காவல் நிலையத்தில் தலைமைப் போக்குவரத்து காவலராக (Head Constable) பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் தனது பணியை முடித்துவிட்டு, சீருடை அணியாமல் சாதாரண உடையில் தனது 14 வயது மகளுடன் பிராட்வே பகுதியில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலைக்குக் காய்கறி வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகக் காய்கறிப் பை கீழே விழுந்துள்ளது. இது தொடர்பாகக் கடைக்காரப் பெண் காவியா என்பவருடன் ரேவதிக்குச் சாதாரண வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு திடீரென முற்றியதில், காவியா உட்பட அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பெண் காவலர் ரேவதியைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று ரேவதி கூறிய பிறகும், அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை “போலீஸாக இருந்தால் என்ன?” என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்து மாறி மாறி உதைத்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற அவரது 14 வயது மகளையும் முடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் காவலர் ரேவதி, தற்போது சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார், பெண் காவலரைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை முதற்கட்டமாக அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள காவியா உள்ளிட்ட மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.