ஹாங்காங்கின் டாய் போ (Tai Po) மாவட்டத்தில் உள்ள வாங் புக் கோர்ட் (Wang Fuk Court) என்ற மக்கள் குடியிருப்பு வளாகத்தில் திடீரென ஏற்பட்ட பெரும் தீ விபத்து ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து இருந்த பல அடுக்குமாடி கோபுரங்களை விநாடிகளில் சூழ்ந்த இந்த கோரத் தீயில் சிக்கி, இதுவரை குறைந்தது 13 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் கட்டிடங்களுக்குள் சிக்கி தவித்த நிலையில், பலத்த காயமடைந்த டஜன் கணக்கானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. கட்டிடத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரம் (Bamboo Scaffolding) மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பாலிமர் வலைகள் ஆகியவற்றில் முதலில் தீப்பற்றியுள்ளது. இந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தீயை வேகமாக மேல்நோக்கிப் பரவச் செய்யும் எரிபொருளாக மாறியதால், சில நிமிடங்களிலேயே பல அடுக்குமாடி கோபுரங்களின் முன்பகுதிகள் முழுவதுமாக நெருப்புப் பிழம்புகளாக மாறின.
திடீரென பரவிய கரும்புகை மற்றும் கடுமையான வெப்பம் காரணமாக குடியிருப்பில் இருந்த வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உடனடியாக வெளியேற முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு 1,200க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து அதிதீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தீயின் கொடூரத் தாக்கம் மற்றும் கட்டிடங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்த ஆபத்தான சூழலிலும், தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மற்றும் அதிநவீன உபகரணங்களைப் பயன்படுத்திப் பலரை பத்திரமாக மீட்டனர்.
இந்த கோர விபத்து குறித்து ஹாங்காங் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முறையான பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டுமானப் பொருட்களைக் குவித்தது மற்றும் அலட்சியமாகச் செயல்பட்டது ஆகிய சந்தேகங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொறியாளர்கள் மீது முதற்கட்ட நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. இந்தத் துயரச் சம்பவம் ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாடுகள் குறித்த பெரிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.