Posted in

மேடம் சொல்றபடிதான் நடப்பேன்! ஐஏஎஸ் அதிகாரியிடம் பெட்டிப் பாம்பை அடங்கிய அமைச்சர்; வனத்துறை கூட்டத்தில் பரபரப்பு!

பொதுவாகத் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பில் அமைச்சர்கள் காட்டும் வழியில்தான் அரசு அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் செயல்படுவது மரபாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர்மாறாக வனத்துறையில் மட்டும் ஒரு மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி, ஒட்டுமொத்தத் துறையையும், ஏன் அமைச்சரையும் கூடத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகி இருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் சுப்ரியா சாகு (Supriya Sahu IAS) குறித்துத்தான் தற்பொழுது இந்த விவாதப் புயல் கிளம்பியுள்ளது.

கடந்த முந்தைய திமுக ஆட்சியிலும் சரி, தற்போதைய தவெக ஆட்சியிலும் சரி, தமிழகத்தில் எத்தனையோ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் துறைகளில் இருந்து அதிரடியாகப் தூக்கியடிக்கப்பட்டு, வெவ்வேறு துறைகளுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சுப்ரியா சாகுவை மட்டும் கடந்த பல ஆண்டுகளாக யாராலும் இந்த வனத்துறையிலிருந்து அசைக்கக் கூட முடியவில்லை என்று கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. ஐநா சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதால், சுப்ரியா சாகு நினைத்தால் மட்டுமே இந்தத் துறையை விட்டு மாறுவார், மற்றபடி டெல்லியோ அல்லது தமிழக அரசோ நினைத்தாலும் இவரை மாற்றுவது எளிதல்ல என்ற பேச்சு தற்பொழுது பரவலாக நிலவுகிறது.

இந்த நிலையில், அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற வனத்துறையின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சுவாரஸ்யமான விவகாரம் தற்பொழுது கசிந்துள்ளது. அந்தக் கூட்டத்திற்கு துறை சார்ந்த அமைச்சர் வருவதற்கு முன்பாகவே, அங்கு அமர்ந்திருந்த மற்ற கீழ்நிலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, “இன்றைய கூட்டத்தில் நான் சொல்றபடிதான் அனைத்தும் நடக்கணும்; அமைச்சரும் நாம் சொல்றபடிதான் நடப்பாரு. எனவே, நான் கொடுக்கும் இன்ஸ்ட்ரக்ஷனை மட்டும் கவனிங்க” என்று மிகத் துணிச்சலாகக் கூறியதாகத் தெரிகிறது.

அவர் சொன்னபடியே, சிறிது நேரம் கழித்துக் கூட்டத்திற்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர், அதிகாரிகளை நோக்கிப் பேசும்போது, “அனைவரும் மேடம் (சுப்ரியா சாகு) சொல்றதைக் கேட்டு, அதன் வழியிலேயே நடங்க; துறையைச் சிறப்பாக வச்சிருக்கணும்” என்று பாராட்டிப் பேசிவிட்டு, ஒட்டுமொத்த ஆலோசனைக் கூட்டத்தையே அவரிடமே ஒப்படைத்துவிட்டுச் சென்றாராம். அதிகாரிகளை ஆட்டி வைப்பதே அமைச்சர்களின் பாணியாக இருக்கும் அரசியல் சூழலில், அமைச்சரையே தனது நிர்வாகத் திறமையால் வியக்க வைத்து, துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த ஐஏஎஸ் அதிகாரியின் பாணி தற்பொழுது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் ட்ரெண்டிங்கான செய்தியாகப் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *