பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் பரப்பளவிலான, நூறு கோடி ரூபாய் மதிப்புமிக்க நிலத்தின் சட்டவிரோதப் பத்திரப்பதிவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நிலம், கடந்த ஜூலை 6 ஆம் தேதி இரண்டு தனியார் நபர்களின் பெயரில் வெறும் இரண்டு கோடி ரூபாய்க்குப் போலியான ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழக ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது நீதிமன்றத்தின் தலையீட்டால் இந்த பெரும் சொத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட இந்த அறக்கட்டளை நிலத்தை விற்கவோ, வேறு நபர்களுக்கு மாற்றவோ கூடாது என்ற கடுமையான நிபந்தனை இருந்தது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பாளர்கள் வசமிருந்த இந்த நிலம், பல சட்டப் போராட்டங்களுக்குப் பின் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் தக்காரின் (நிர்வாக அதிகாரி) கட்டுப்பாட்டின் கீழ் மீட்கப்பட்டு, தற்போது பக்தர்களின் இலவச வாகன நிறுத்த இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், கோவிலின் தக்காரை வழக்கில் சேர்க்காமல், நீதிமன்றத்தை ஏமாற்றிப் பெறப்பட்ட முந்தைய தனி நீதிபதியின் உத்தரவைச் சாதகமாகப் பயன்படுத்தி, இந்த முறைகேடான பத்திரப்பதிவு அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு குறித்து பழனி கோவில் இணை ஆணையர் மற்றும் தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீதிமன்றத்தை ஏமாற்றி இந்த நிலப்பதிவு உத்தரவு பெறப்பட்டுள்ளது” என்று கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட அந்த பத்திரப்பதிவை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டதோடு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை முழுமையாக மீட்டெடுத்தனர்.
இந்த நில மோசடி விவகாரத்தில், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த தற்காலிகச் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கனவே பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். எனினும், இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள், “இவ்வளவு பெரிய முறைகேட்டில் சார்பதிவாளரை மட்டும் சஸ்பெண்ட் செய்த அரசின் நடவடிக்கை போதுமானதல்ல” என்று சுட்டிக்காட்டி, இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகள் மற்றும் மோசடி ஆவணங்களை எழுதியவர்கள் மீதும் கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.