Posted in

இவர் ஏன் இவ்வளவு முந்திக்கொள்கிறார்? இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சரைப் பார்த்து முதல்வர் விஜய் அதிருப்தியா?

அதிமுக முன்னாள் அமைச்சர்களான புதுக்கோட்டை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழக (தவெக) தலைமை அலுவலகத்தில் முறைப்படி தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த பிரம்மாண்ட இணைப்பு விழாவைத் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் சி. ஜோசப் விஜய் தரப்பு நேரலையில் (Live Stream) உன்னிப்பாகக் கவனித்துள்ளது. அப்போது, மேடையில் மற்ற முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் அமர்ந்திருக்க, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மட்டும் அனைத்து விஷயங்களிலும் முந்திக்கொண்டு, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வகையில் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது இந்த அதிரடி நடவடிக்கைகள் முதல்வர் தரப்புக்குச் சற்றே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், “மத்தவங்க எல்லாம் எவ்வளவு அமைதியா இருக்காங்க.. இவர் ஏன் இவ்வளவு பரபரப்பாகுறார்?” என்று முதல்வர் வட்டாரத்தில் கமெண்டுகள் பறந்ததாகவும் அறிவாலய மற்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழா முடிந்த பிறகு, கட்சியில் புதிதாக இணைந்த முக்கிய நிர்வாகிகளை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். அந்தச் சந்திப்பின் போது, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம், “கரூர்ல நம்ம தவெக நிகழ்ச்சியை ரொம்ப சிறப்பா, பிரம்மாண்டமா செய்யணும்” என்று முதல்வர் சில முக்கிய அறிவுறுத்தல்களை (Instructions) வழங்கியுள்ளார். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உடனே குறுக்கிட்டு, “நாங்க எல்லாத்தையும் சிறப்பா செஞ்சிடுறோம் தம்பி!” என்று வழக்கம் போல முந்திக்கொண்டு பதிலளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் இப்படி முந்திக் கொண்டதை முதல்வர் விஜய் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல், புன்னகையோடு கடந்து சென்றதாகக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.

புதுக்கோட்டை விஜயபாஸ்கரின் இந்த ஓவர் அலப்பறையைத் தொடர்ந்து, முதல்வர் தரப்பில் இருந்து கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மட்டும் தனியாகத் தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிகிறது. விழா முடிந்து அடுத்த இரு தினங்களில், இரண்டு முறை கரூர் விஜயபாஸ்கரிடம் முதல்வர் அலுவலகத் தரப்பு போனில் பேசி, கரூரில் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து விரிவாக ஆலோசித்துள்ளது. புதுக்கோட்டை விஜயபாஸ்கரைத் தவிர்த்து விட்டு, கரூர் விஜயபாஸ்கருக்கு மட்டும் முதல்வர் தரப்பு இப்படி முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருப்பது, தவெக-வுக்குள் புதுக்கோட்டை மாஜிக்கு ஆரம்பத்திலேயே விழுந்த தடா என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், கட்சிக்குள் நுழைந்த வேகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விஜயபாஸ்கர் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது ஆதரவாளர்கள் சிலரின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு தவெக ஒன்றிய செயலாளர் பதவிகள் மற்றும் அரசு வழக்கறிஞர் (Government Pleader) பணியிடங்களை ஒதுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட தவெக அமைச்சரான பர்வேஸ் என்பவரிடம் ஒரு லிஸ்ட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த லிஸ்ட்டை வாங்க மறுத்து அதிரடியாக நிராகரித்த அமைச்சர் பர்வேஸ், “புதுக்கோட்டை மாவட்ட விவகாரங்கள்ல நீங்க தலையிட வேண்டாம்; எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடத்துல (தலைமை அலுவலகம்) பேசி முடிவு பண்ணிக்கோங்க” என மிகவும் கராராக முகத்திலடித்தாற்போல் கூறி அனுப்பிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *