கடந்த 2025-ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக-வின் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிட்டுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களுக்கு மேலாகியும் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர், தற்போது அங்கு இடைத்தேர்தல் வரவுள்ளதை மனதில் வைத்தே அவசர அவசரமாகக் கரூருக்குப் பயணம் மேற்கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவது முற்றிலும் மலினமான வாக்கரசியலாகும் என்று சீமான் தனது கண்டன அறிக்கையில் சாடியுள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்தே, கரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் களம் தயாராகியுள்ளது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் துடிக்கும் தவெக அரசு, ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா 35 லட்சம் ரூபாய் வரை துயர் துடைப்புத் தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையிலும், தற்போது கூடுதல் சலுகையாக அரசு வேலை என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறது. இடைத்தேர்தல் வாக்கு வேட்டைக்காக அரசுப் பணியைத் தாரைவார்ப்பது ஒரு தவறான முன்உதாரணமாக மாறிவிடும் என்றும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாம் தமிழர் கட்சித் தலைமை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தகுதியுள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, பல ஆண்டுகளாகத் தங்களின் அரசு வேலைக் கனவோடு படித்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குரிய நியாயமான வேலைவாய்ப்புகளை வழங்காமல், திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் சுயலாபத்திற்காக இப்படி அரசுப் பணிகளை வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கோ அல்லது நச்சுவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கோ கிடைக்காத முன்னுரிமை, இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் காட்டப்படுகிறது என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கரூரில் நடந்த அந்த கோரமான கூட்ட நெரிசல் மரணங்களுக்குத் தவெக-வும், இன்றைக்கு முதல்வராக இருக்கும் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும் என சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். விபத்து நடந்த நேரத்தில் களத்திற்குச் சென்று மக்களைப் பார்க்காமல் சென்னைக்கு விரைந்தவர், தற்போது கரூர் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்தவுடன் காட்டும் இந்தப் பரிவெல்லாம் வெறும் கேலிக்கூத்து என்று அவர் வர்ணித்துள்ளார். இந்த முடிவில் பொதிந்திருப்பது மனிதநேயமோ அல்லது தார்மீக உணர்வோ கிடையாது; முழுக்க முழுக்க அரசியல் லாப நட்டக் கணக்கு மட்டுமே என்பதால், தவெக அரசு இந்தத் தவறான முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.