ஆளும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கி, ஆட்சியை கவிழ்க்கச் சதி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வி. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோர் இன்று நேரில் ஆஜராக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அனுப்பிய சம்மனைப் புறக்கணித்துள்ளனர். இன்று காலை 10:30 மணிக்குள் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், இருவருமே காவல் நிலையத்தில் ஆஜராகாதது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வர திட்டமிட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தால் ரூ.35 கோடி வரை தருவதாகக் கூறி திமுகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜா கடந்த ஜூன் 29 அன்று சென்னை காவல் ஆணையரிடம் ஆடியோ ஆதாரங்களுடன் பகீர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற பெயரில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் உட்பட இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரிலேயே இந்த பேரம் பேசப்பட்டதாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாரை உடனடியாகக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கரூரில் உள்ள அவர்களின் பூர்வீக இல்லமான ராமேஸ்வரப்பட்டி வீடு மற்றும் சென்னை வாசஸ்தலங்களில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இருவரும் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, திருவல்லிக்கேணி போலீசார் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு “லுக் அவுட்” (Lookout Circular) நோட்டீஸ் அனுப்பி தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், கைது நடவடிக்கைக்குப் பயந்து செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்; அந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் வரவுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தே அவர்கள் போலீஸ் விசாரணையில் ஆஜராவார்களா அல்லது நீதிமன்றம் மூலம் அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே மற்றொரு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வா. வேலு மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதாகக் கூறி போலீஸ் விசாரணையைத் தவிர்த்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பும் அதே பாணியைப் பின்பற்றுமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.